சனி, 4 டிசம்பர், 2010

சமையல் அரிச்சுவடி-1

ஆரம்பகால சமையல் (For Beginners)
நன்கு சமைக்கத் தெரிந்தவர்களுக்கு குறிப்புகளைக் கேட்டோ, பார்த்தோ சமைப்பது பெரிய விஷயமே இல்லை. இப்போதெல்லாம் திருமணமாகாத ஆண்களும், பெண்களும் வெளியூர்களில் வேலை பார்க்கும் அவசியம் ஏற்படும் போது, சாப்பாடு பெரும் பிரச்னையாக இருப்பதால், அவர்களே சமைக்கவும் வேண்டிய தேவை உள்ளது. அவர்களிடம் உள்ள அத்தியாவசியமான சில பொருட்களையும், பாத்திரங்களையும் கொண்டு என்ன சமைப்பது என்ற சந்தேகம் நிறைய வரும். அவர்களுடைய அடிப்படை சந்தேகங்கங்களை போக்குவதற்கு இந்த பகுதி உதவியாய் இருக்கும்.
சமைக்கும் போது ரொம்ப கவனமாக கைகளை சுட்டுக் கொள்ளாமல் சமைக்க முடிந்தாலே சமையலை ஓரளவு கற்றுக் கொண்டதாக அர்த்தம். கொஞ்சம் பாத்திரங்களையும், கொஞ்சம் பொருட்களையும் வைத்துக் கொண்டே சுவையாக சமைக்க முடியும். காய்கறிகளை நறுக்க சின்ன பலகையும், பதமான நல்ல உறுதியான கத்தியும் போதும். சமைக்க ஆரம்பிக்கும் போது தேவையான எல்லாவற்றையும் நறுக்கி வைத்துக் கொண்டு ஆரம்பித்தால் தான் புதிதாக சமைப்பவர்களுக்கு தடுமாற்றமில்லாமல் சமைக்க முடியும். சமைக்க நன்றாக பழகியவர்களால் மட்டுமே ஒரே சமயத்தில் 2, 3 வேலைகளை செய்ய முடியும். ஓரளவு சமைக்கத் தெரிந்தவர்களுக்கு பிரச்சனையில்லை. எதுவுமே தெரியாமல் சமைக்க ஆரம்பித்தவர்களுக்காகவே இந்த தொடர்.
சமைக்கத் தெரியாதவர்களைப் பார்த்து, முதலில் கேட்கப்படும் கேள்வி 'ஒரு வெந்நீராவது ஒழுங்கா வைக்கத் தெரியுமா?' ஆனாலும் அதுவும் முக்கியம் தான். வாட்டர் பில்டர் இருந்தால் கவலையில்லை. அது இல்லையென்றால் தண்ணீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிப்பதே ஆரோக்கியத்திற்கு நல்லது.
தண்ணீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து அடுப்பில் வைத்தோமா, லேசாக சூடு ஏறியதும் நிறுத்தினோமான்னு இருக்கக் கூடாது. தண்ணீரை வைக்கும் பாத்திரத்தில் வழிய வழிய தண்ணீர் பிடித்து வைக்காமல் ஓரங்குல அளவு குறைவாக வைத்தால் தான் தண்ணீர் கொதிக்கும் போது பாத்திரத்தை விட்டு வெளியே தெறித்து அடுப்பை அணைக்காமலிருக்கும்.
Boiling water
அடுப்பை சீராக வைத்து, தண்ணீருள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு சூடேறி சின்ன சின்ன பப்பிள்ஸ் மறைந்து, பெரிய பப்பிள்ஸ் வந்து தளதளவென்று கொதிக்கும் போது நிறுத்த வேண்டும். மூடி வைக்கும் போது டைட்டாக மூடாமல் சிறிது இடைவெளி விட்டு மூட வேண்டும். வேர்த்து ஒழுகும் தண்ணீர் வெந்நீருக்குள் சொட்டுவது நல்லதல்ல. இது தான் வெந்நீர் வைக்கும் முறை. இப்படி வைக்கும் வெந்நீரை குடிப்பது தான் நல்லது.
அடுத்ததொரு முக்கியமான விஷயம். பால் காய்ச்சுவது :-)
எப்பொழுதுமே பாலின் அளவை விட கொள்ளளவு அதிகம் பிடிக்கும் பாத்திரத்தில் பால் காய்ச்சினால்தான் சட்டென பொங்கி அடுப்பில் வழிந்து விடாமல் தடுக்க முடியும்.
பால் வாங்கி வந்ததும் பாலை கவரோடு கழுவி விட்டு, ஒரு மூலையில் சின்ன கத்தரிக் கோலால் ஓரங்குல அளவிற்கு நறுக்கி விட்டு, பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். நறுக்கிய மூலையின் எதிர் மூலையை கையால் பிடித்து ஊற்றினால் எல்லா பாலும் பாத்திரத்தில் கொட்டி விடும்.
boiling milk
அடுப்பை மிதமாக வைத்து பாலை காய்ச்ச வேண்டும். பொங்கி வரும் போது 2, 3 முறை பாத்திரத்தை கலக்கி வைத்து திரும்ப பொங்க விட வேண்டும். கலக்கி வைப்பது சிரமமாக இருந்தால் கால் தம்ளர் தண்ணீரை பக்கத்தில் வைத்துக் கொண்டு பொங்கி வரும் போதெல்லாம், சிறிது சிறிதாக ஊற்றினால் பொங்குவது அடங்கி, திரும்பவும் பால் காய்ந்து பொங்கும். இதுபோல் 2, 3 முறை செய்த பின் அடுப்பை அணைக்கவும்.
வெந்நீர் போட கத்துக்கிட்டாச்சு, பால் காய்ச்ச கத்துக்கிட்டாச்சு. காலையில் எழுந்தவுடனேயோ, ஆஃபீஸிலிருந்து டயர்டாக வந்தாலோ முக்கியமாக தேவைப்படும் ஒன்று டீ (தேநீர்). டீ எப்படி போடுவது என்று தெரிஞ்சுக்கலாமா?
எப்பொழுதுமே டீ போடும் பாத்திரம் தண்ணீர், பால், டீத்தூள் எல்லாம் போட்டு கொதிப்பதற்கு இடம் இருப்பது போல் தாராளமாக இருக்க வேண்டும், கைப்பிடியுள்ள, கெட்டிலானால் டீயை கலக்கும் போதோ, எடுக்கும் போதோ கைப்பிடியை மட்டும் பிடிக்காமல், இன்னொரு கையில் இடுக்கியாலோ, துணியாலோ பிடித்து எடுப்பது நல்லது. எதிர்பாராத விதமாக கைப்பிடி உடைந்தாலோ, ஸ்க்ரூ ஏதும் கழண்டிருந்தாலோ மேலே கொட்டிக் கொள்ளாமல் தப்பிக்கலாம். பால் காய்ச்சுவதற்கு, டீ போடுவதற்கு என தனிப் பாத்திரமொன்றை எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள். அந்த பாத்திரத்தில் புளி கரைப்பதற்கோ, குழம்பு வைப்பதற்கோ பயன்படுத்தினால் பால் திரிந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம். (அப்படி திரிந்து போன பாலையும் கீழே கொட்டாமல் என்ன செய்யலாமென பிறகு பார்க்கலாம்.)
Tea preparation
அரை லிட்டர் பாலில் டீ போடும் முறை
நிறைய பேருக்கு எவ்வளவு பாலுக்கு எவ்வளவு தண்ணீர் சேர்த்து, எப்படி டீ போடுவது என்றே தெரியாது. நல்ல திக்கான பாலாக இருந்தால், 1/2 லிட்டர் பாலுக்கு 200 மிலி டம்ளரில், 2 டம்ளர் தண்ணீர் சேர்க்கலாம். மொத்தமாக 5 டம்ளர் அளவு வரும். கால் டம்ளர் சேர்த்து ஊற்றினால் கொதித்து குறைவதற்கு சரியாக இருக்கும்.
தேவையான பாத்திரங்கள்:
கெட்டில், டீ வடிகட்டி, டீ வடிக்க ஒரு பாத்திரம், டம்ளர்கள்.
தேவையான பொருட்கள்:
பால் - 1/2 லிட்டர்,
தண்ணீர் - 2 டம்ளர் + 1/4 டம்ளர்,
டீத்தூள் - 5 தேக்கரண்டி,
சர்க்கரை - 4 மேசைக்கரண்டி.
செய்முறை:
பாலுடன் தண்ணீர், டீத்தூள், சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
பொங்கி வரும் போதெல்லாம் கலக்கி, கலக்கி, திரும்ப வைக்க வேண்டும். பொங்கி வழிந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்.
நன்கு கொதித்ததும், வடித்தால் டீ ரெடி. (ஒரு ஏலக்காயும், சிறிது தோல் சீவிய இஞ்சியையும் சின்ன இடிப்பானில் நசுக்கி, டீ கொதிக்கும் போது போட்டால் டீயின் சுவை இன்னும் கூடும்.)
டீயை சரியாக கொதிக்க விடலைன்னா, பால் வாசம் அடிக்கும். டீத்தூள் குறைவாக போட்டாலும் டீ நன்றாக இருக்காது. எப்போதுமே டீ போட்டதுமே, வடித்து, டம்ளர்களில் ஊற்றி விட வேண்டும். அப்போது தான் சூடு ஆறாமலிருக்கும்.
இந்த அளவுகள் 5 பேருக்கானது. அவ்வளவு பேர் இல்லையே, ஒருத்தருக்கு மட்டும் தான் போடணுமானால் என்ன செய்யணும்னு கேட்கறீங்களா? சொல்றேனே.
எப்படியும் 1/2 லிட்டர் பால் வாங்குவீர்கள். பாலை காய்ச்சி தனியே வைத்துக் கொள்ளவும். 3/4 டம்ளர் பால், 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு தேக்கரண்டி டீத்தூள், 3/4 மேசைக்கரண்டி சர்க்கரை சேர்த்து 2,3 முறை நன்கு பொங்கி வர வர கொதிக்க விட்டு, இறக்கி உடனே வடிக்கட்டினால் டீ ரெடி.
ரொம்ப தலைவலியாக இருந்தால், ஒரு சிறு துண்டு இஞ்சி நசுக்கி டீ கொதிக்கும் பொழுது போட்டு, கொதித்ததும் வடிகட்டி அருந்தினால் தலைவலி குறையும். ஃப்ரிஜ் இல்லாதவர்கள், மீதியுள்ள பாலை ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, அதனுள் பால் பாத்திரத்தை (ஆறியதும்) வைத்து மூடி வைத்தால் பால் கெடாமலிருக்கும்.
மாலையில் டீ போடவும், இரவு குடிக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். மாலையில் டீ தேவையில்லையெனில் தயிர் போட்டுக் கொள்ளலாம். பால் பாக்கெட்டை வாங்குவதை விட ஸ்கிம்டு மில்க் பவுடரை வாங்கி வைத்து கொண்டால், தேவையான அளவிற்கு எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். கொழுப்பும் அதில் குறைவென்பதால் உடல் ஆரோக்கியதிற்கு நல்லது.
தயிர் தயாரிக்கும் முறை
பாலை வெதுவெதுப்பான நிலையில் வைத்து (ரொம்ப சூடாக இருக்கக் கூடாது), ஒரு தேக்கரண்டி தயிரை சேர்த்து நன்கு கலக்கி, மூடி வைக்கவும். பால் தயிராகும் வரை பாத்திரத்தை அசைக்காமலிருப்பது நல்லது.

சமையல் அரிச்சுவடி-2

பாகம் - 2
பாலில் டீ போடும் முறையைப் பார்த்தோம். பால் பவுடர் உபயோகித்து டீ போடுவது எப்படின்னு தெரிஞ்சுக்கலாமா?
பாலுக்கும், தயிருக்கும் தேவை என்றால் 1 மேசைக்கரண்டி பால் பவுடரை 200 மில்லி தண்ணீரில் கட்டியின்றி கரைத்து, பொங்கி வரும் வரை காய்ச்சி இறக்கினால் பால் ரெடி.
டீ போட வேண்டுமென்றால், 3/4 மேசைக்கரண்டி பால் பவுடரை 200 மிலி தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும். லேசாக சூடேறியதும் 1 தேக்கரண்டி டீத்தூள், 2 தேக்கரண்டி (பாலிலேயே கொஞ்சம் இனிப்புத் தன்மை இருக்கும்) சர்க்கரை சேர்த்து டீத்தூள் வேகும் வரை கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டினால் டீ குடிப்பதற்கு தயார். இதிலும் தூளாக்கிய ஏலக்காயையும், நசுக்கிய இஞ்சியையும் சேர்த்து டீ போடலாம். பால் சூடாகாமல் டீத்தூள், சர்க்கரை சேர்த்தால் சில நேரங்களில் பால் திரிந்து விடும்.
பால் திரிந்தால் என்ன செய்வதுன்னு சொல்றேன்னு சொல்லி இருந்தேனல்லவா? திரிந்து போன பாலை கொஞ்சம் தயிர் அல்லது சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கி இன்னும் நன்றாக திரிய வைக்கவும். நன்கு திரிந்ததும் வடிகட்டி, கட்டியாக நிற்கும் பனீரை ஒரு சுத்தமான துணியில் கட்டி, மேலே ஏதாவது வெயிட் வைத்தால் ஒரு மணி நேரத்தில் தண்ணீர் வடிந்து கெட்டியான பனீர் கிடைக்கும். இந்தப் பனீரை வைத்து பனீர் மசாலா, பட்டர் மசாலா இன்னும் எவ்வளவோ செய்யலாம். ரசகுல்லா கூட செய்யலாம்!
திரிந்த பாலில் ரசகுல்லா !
கெட்டியான பனீரை கைகளால் நன்கு தேய்த்து உதிர்த்து விட்டு நீள ஷேப்பில் உருட்டி வைத்துக் கொள்ளவும். 1/2 டம்ளர் சர்க்கரையில் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து சர்க்கரை கரைந்து, கொதிக்க விடவும். தளதளன்னு நன்கு கொதிக்கும் போது உருட்டிய உருண்டைகளை ஒவ்வொன்றாகப் போட்டு மேலே மிதந்து வந்தபின் அடுத்தது சேர்க்க வேண்டும். எல்லா உருண்டைகளையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் ரசகுல்லா சாப்பிட தயார் தான். அளவு ரொம்ப கம்மியாக இருக்குன்னு பார்க்கறீங்களா? அரை லிட்டர் பால் திரிந்தால் இவ்வளவு தாங்க வரும். இதுக்காக வேண்டுமென்றே அடுத்த முறை பாலைத் திரிய விடக் கூடாது :-)
ஹை, பார்த்தீங்களா? இப்ப ஒரு இனிப்பும் செய்ய கத்துக் கொண்டாச்சு.
இன்னொரு கொசுறு டிப்ஸ்: வடிகட்டிய பின் கிடைக்கும் தண்ணீர்தான் வே வாட்டர் எனப்படுவது. சூப் வைக்க பயன்படுத்தலாம். வயிற்றுப்போக்கு இருப்பவர்களுக்கு வே வாட்டருடன் சர்க்கரை சேர்த்து குடிக்க வயிற்றுப்போக்கு மட்டுப்படும். இந்த வே வாட்டரை 2, 3 நாட்கள் புளிக்க விட்டு, அந்த வே வாட்டரை பாலில் ஊற்றி திரிய வைத்து பனீராக்கி ரசகுல்லா செய்வது தான் பெரிய அளவில் செய்யும் சரியான முறை.
பால் பவுடர் ஸ்கிம்டு மில்க் பவுடராக (SKIMMED MILK POWDER) கொழுப்பு அதிகமில்லாமல் உடம்புக்கு நன்மை பயக்கும்.
காஃபி போட வேண்டுமென நினைப்பவர்களுக்கும் சொல்லித் தர வேண்டுமல்லவா? ஆனால் காஃபியை விட டீ தான் உடம்புக்கு நல்லது. காஃபியை அதிகம் குடிப்பது கெடுதலை உண்டாக்கும்.
காஃபி போடுவதில் 2 வகைகள் உள்ளன.
1. இன்ஸ்டன்ட் தூள் சேர்த்து காஃபி போடுவது,
2. சாதாரண காஃபித்தூளில் டிக்காஷன் போட்டு காஃபி போடுவது.
டிக்காஷன் போட்டு காஃபி போடுவதிலும் 2 வகைகள் உண்டு.
1. ஃபில்டர் காஃபி,
2. சாதாரண வகையில் போடுவது.
இன்ஸ்டன்ட் காஃபிக்கு பாலை நன்கு காய்ச்சிக் கொள்ள வேண்டும். பால் சூடாக இருக்க வேண்டும், பாலில் அதிக தண்ணீர் இருந்தாலும் காஃபி நன்றாக இருக்காது. 1 டம்ளர் காஃபிக்கு 2 1/2 தேக்கரண்டி சர்க்கரையும், ஒரு தேக்கரண்டி இன்ஸ்டன்ட் காஃபித்தூளும் தேவைப்படும். காஃபித்தூளின் அளவு அதனதன் கம்பெனி ப்ராண்டை பொறுத்து மாறுபடும். மிகவும் நைசாக இருக்கும் காஃபித்தூளும் குறைவாகவும், குருணைகாளாக (granules) இருக்கும் காஃபித்தூள் அதிகமாகவும் தேவைப்படும். நல்ல உலர்ந்த தம்ளரில் சர்க்கரையையும் காஃபித்தூளையும் போட்டு சூடான ஆடையின்றி வடிகட்டிய பாலை அதில் ஊற்றி, உடனே ஆற்றவும். நுரை பொங்க ஆற்றி, கோப்பைகளில் ஊற்றி தர வேண்டியது தான்.
எப்போதுமே காஃபியானாலும் டீயானாலும் சூடாக கொடுப்பதுதான் நல்லது. சூடு குறைவாக குடிப்பவர்கள் சிறிது நேரம் ஆற விட்டு குடிக்க முடியும். நாமே சூடின்றி கொடுத்தால் சூடாக குடிப்பவர்களுக்கு குடித்தது போலவே இருக்காது. அதேபோல் பாலாடையும் நிறைய பேருக்கு பிடிக்காது. அதனால் எப்போதும் விருந்தினர்களுக்கு கொடுக்கும் போது சூடாக, பாலாடையின்றி, நுரை பொங்க கொடுத்தால் பார்க்கும் போதே குடிக்க வேண்டுமென தோன்றும்.

சமையல் அரிச்சுவடி-4

பாகம் - 4
டீயைப் பற்றி சொல்லும் போது புத்துணர்ச்சி தரும் புதினா டீ பற்றியும், உடலுக்கு நன்மை பயக்கும் கிரீன் டீ பற்றியும் சொல்லாமல் விட்டு விட்டேன்.
அதே போல் காஃபியிலும் பித்தம் போக்கும் கொத்தமல்லி காஃபி, கடுங்காப்பி என கிராமத்தில் அழைக்கப்படும் காஃபியையும் சொல்ல வேண்டும்.
புதினா டீ
Black teaவழக்கமாக 5 பேருக்கு டீ போடுவது போல் போட்டு, டீ நன்கு கொதித்து, அதை இறக்கப் போகும் போது, அதில் சுத்தம் செய்து நன்கு கழுவிய புதினா இலை ஒரு கைப்பிடி, சிறிய கோலி அளவு நசுக்கிய இஞ்சி போட்டு, ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி மூடி வைக்கவும். 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டி குடித்தால் களைப்பெல்லாம் பறந்து, புத்துணர்வு வரும். ஒருவருக்கு மட்டும் என்றால், ஆறேழு புதினா இலைகள், கொட்டைப்பாக்களவு இஞ்சி போடவும்.
புதினா எப்போதும் புதியதாக கிடைக்காது என்றால், நிறைய கிடைக்கும் போது வாங்கி சுத்தம் செய்து கழுவி, காயவைக்கவும். நன்கு காய்ந்தபின் பொடியாக்கி ஒரு டப்பாவில் போட்டு இறுக மூடி வைக்கவும். ஒருவருக்கான டீ போடுவது என்றால் கால் தேக்கரண்டி அளவும், 5 பேருக்கு என்றால், ஒரு தேக்கரண்டி அளவும் புதினா பொடி போட்டு கொதிக்க விட்டு இறக்கவும்.
கிரீன் டீ
கிரீன் டீ உடலிலுள்ள கெட்ட கொழுப்பை நீக்கி நல்ல கொழுப்பை அதிகப்படுத்துகிறது. கான்சர், ஆர்த்தரைடீஸ், இரத்தக் கொதிப்பு போன்றவற்றிற்கும் மருந்தாக இருக்கும் என்று சொல்கிறார்கள். ஸ்ட்ரோக், ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்கிறது. உடல் எடை குறைய உதவுகிறது. தினமும் காலையில் டீக்கு பதில் கிரீன் டீ குடிக்கலாம். கிரீன் டீயை ரொம்ப சூடாகவோ, ரொம்ப ஆறியோ குடிக்கக் கூடாது. 56 - 62 சென்டிகிரேட் வெப்பத்தில் குடிப்பது நல்லது. எந்த ஒரு பொருளுக்கும் பிளஸ்ஸும் உண்டு, மைனஸும் உண்டு. கிட்னி ப்ராப்ளம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் குடிக்கவும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தான். ஒரு நாளைக்கு 6 கப் டீக்கு மேல் குடிக்கக் கூடாது. ஆல்கஹாலுடன் சேர்த்து குடிக்கக் கூடாது. அல்சர் தொந்திரவு உள்ளவர்கள் வெறும் வயிற்றில் குடிப்பதை தவிர்க்கவும். உணவின் இடையிலும் குடிக்கக் கூடாது.
கிரீன் டீ சாதாரண டீ போடுவது போல் போடக் கூடாது. ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்கும் போது இறக்கி, ஒரு தேக்கரண்டி அளவு கிரீன் டீ போட்டு நன்றாக மூடி வைக்கவும். 2 நிமிடம் கழித்து பார்த்தால், குருணை போல் நாம் போட்ட கிரீன் டீ இலை இலையாக இருக்கும். வடிகட்டி ஓரிரு சொட்டுகள் எலுமிச்சை சாறு கலந்து சர்க்கரை சேர்க்காமல் அப்படியே குடிக்கலாம். சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது ரொம்ப நல்லது. குடிக்க கஷ்டமாக இருந்தால், தேன் கலந்தோ, சிறிதளவு சர்க்கரை சேர்த்தோ குடிக்கலாம். ரொம்ப துவர்ப்பது போல் இருந்தால், தூளைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம்.
பிளாக் டீ
சாதாரண டீத்தூளை மட்டும் கொதிக்க வைத்து, பால் சேர்க்காமல் வைப்பது தான் பிளாக் டீ. ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு தேக்கரண்டி டீத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு (சுமாராக 5 நிமிடம்) இறக்கி வடிகட்டினால் பிளாக் டீ ரெடி. இதனுடன் கால் மூடி எலுமிச்சம் பழம் பிழிந்து கொடுத்தால் வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு கட்டுப்படும். முடிந்தவரை சர்க்கரை சேர்க்காமல் துவர்ப்பாக இருப்பது நல்லது. குடிக்க ரொம்ப கஷ்டமாக இருந்தால், சிறிதளவு தேன் அல்லது சர்க்கரை சேர்க்கலாம். சீனாக்காரர்கள், ஜப்பானியர்கள் பிளாக் டீயைத்தான் அதிகம் விரும்பி குடிக்கிறார்கள்.
கொத்தமல்லி காஃபி
ஒரு டம்ளர் காஃபிக்கு ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைக்கவும். ஒரு மேசைக்கரண்டி அளவு கொத்தமல்லி (தனியா) எடுத்து ஒன்றிரண்டாக நசுக்கி கொதிக்கும் தண்ணீரில் போடவும். கால் தேக்கரண்டி அளவு காஃபித்தூள் சேர்க்கவும். கொத்தமல்லி காஃபிக்கு வெல்லம் தான் நன்றாக இருக்கும். ஒரு எலுமிச்சை அளவு வெல்லத்தை தட்டிப் போட்டு கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டினால், கொத்தமல்லி காஃபி ரெடி.
விரும்பினால் சிறிதளவு இஞ்சியோ, சுக்கோ தட்டிப் போடலாம். தலைவலிக்கு, பித்தத்திற்கு இந்தக் காஃபி நல்லது. இந்தக் காஃபி குடித்தால் சுறுசுறுப்பாக இருக்கும். பால் சேர்க்கத் தேவையில்லை. பால் வேண்டும் என நினைப்பவர்கள் சிறிதளவு சேர்க்கலாம். அதிகம் பால் தேவையில்லை.
கடுங்காப்பி
Black coffeeகிராமத்துப் பக்கம் கடுங்காப்பி என்பார்கள். புதியதாக ஒன்றும் இல்லை. பால் சேர்க்காத கருப்பு காஃபி தான் கடுங்காப்பி!
ஒரு டம்ளர் தண்ணீரை அடுப்பில் வைத்து, ஒரு தேக்கரண்டி சாதாரண காஃபித்தூளைப் போட்டு நன்கு கொதிக்க விடவும். ஒரு எலுமிச்சை அளவு வெல்லம் சேர்த்து கரைந்ததும் இறக்கி, வடிகட்டினால் கடுங்காப்பி தயார்.
வெல்லம் சேர்த்தால் தான் சுவை அதிகம். சர்க்கரையும் சேர்க்கலாம். காஃபித்தூள் குறைவாகப் போட்டால் தான் காஃபி நன்றாக இருக்கும். இதுவும் தலைவலிக்கு நல்ல மருந்து தான்.

என்ன உணவு கொடுக்கலாம்?

என்ன உணவு கொடுக்கலாம்?
இன்றைய காலகட்டத்தில் தனிக்குடித்தனம் என்பது அதிகமாகிவிட்டது. வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் வேலை என்று இருப்பதால், இது தவிர்க்க இயலாததும் ஆகிவிட்டது. பெரியவர்கள் துணை மற்றும் ஆலோசனை இல்லாத காரணத்தால் நிறைய தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பில் நிறைய சந்தேகங்கள் தோன்றும். பெரும்பாலான இளம் தாய்மார்கள் வருந்துவதும், குழம்புவதும் குழந்தையின் உணவு விசயத்தில்தான். எந்தக் காலக்கட்டத்தில் என்ன உணவு கொடுப்பது என்பது அனுபவசாலியான தாய்மார்களுக்குக்கூட தடுமாற்றம் தரும் விசயமாக இருக்கிறது.
என்னதான் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினாலும், சில நேரங்களில் மருத்துவர்கள் பரிந்துரைப்பது மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. பெரியவர்களிடம் கேட்டால், சமையல் குறிப்பில் தேவையான உப்பு என்பது போல், சிலர் "கொஞ்சமாக கொடுங்கள்" என்பார்கள், சிலர் "எல்லாமே கொடுக்கலாம்" என்பார்கள். 'கொஞ்சமாக' என்றால் எவ்வளவு என்பது யாருக்கு தெரியும்? எல்லாமே கொடுக்கலாம் என்றால் மட்டன் பிரியாணி கொடுக்கலாமா என்று கேட்கத் தோன்றும். எனவே, இந்த உணவு விசயத்தை இந்த பாகத்தில் கொஞ்சம் தெளிவாக விளக்கவேண்டும் என்பது எனது விருப்பம்.
Baby healthy foodகுழந்தைக்கு உணவு கொடுத்தல் என்பது சாதாரண செயல். சத்தான உணவு கொடுத்தல் என்பது பொறுப்பான செயல். வளரும் குழந்தைக்கு வெறும் உணவு என்பதைவிட சத்தான உணவு கொடுத்தல் ஒவ்வொரு தாயின் கடமை. பிற்காலத்தில் குழந்தையின் பெரும்பாலான ஆரோக்கியம் சம்பந்தமான விசயங்களை, ஆரம்ப நாட்களே முடிவு செய்கின்றன. எனவே, பிறந்த தினத்தில் இருந்து குழந்தையின் உணவு விசயத்தில் அதிக அக்கறை செலுத்துதல் மிகவும் அவசியமான ஒன்று.
குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் என்னென்ன உணவைக் கொடுக்கலாம் என்பதைப் பற்றி என் அனுபவத்தில் கற்றுக் கொண்டதை, எனது குழந்தைகளின் மருத்துவர் உதவியோடு இங்கு எழுதுகிறேன். 6 மாதம் வரை தாய்பால் மட்டுமே போதுமானது. ஒருவேளை தாய்ப்பால் குழந்தைக்கு போதவில்லை என்ற சந்தேகம் எழுந்தால், மருத்துவரை சந்தித்து கேட்டால் அவர் குழந்தையின் எடை, ஆரோக்கியம் இவற்றைக் கணக்கிட்டு எப்பொழுது என்ன மாதிரியான திட உணவு கொடுக்கலாம் என்பதை சொல்வார்.
பிறந்த குழந்தைக்கு குறைந்தது நாலு மாதம் வரை தாய்ப்பால் மட்டும் போதுமானது. மருத்துவர்கள் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை பரிந்துரைப்பார்கள். குழந்தை பிறந்து 4 மாதங்களுக்கு அல்லது 6 மாதங்களுக்கு பின்னரே திட உணவு கொடுக்க தொடங்க வேண்டும்.
திட உணவு தயாரிக்க குழந்தைக்கு ஃபார்முலா மில்க் தேவையில்லை. பசும்பாலே போதுமானது. பசும்பாலை ஒரு வயதிற்கு மேல் தான் கொடுக்கவேண்டும் என்பதைக் கேட்டு பசும்பாலையே தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. திட உணவுக்கு சிறந்தது பசும்பால் தான் என்றாலும், விரும்பினால் ஃபார்முலாவிலும் கலந்து செய்யலாம். ஃபார்முலாவை சேர்த்தே கூழ் காய்ச்சக் கூடாது. அதிலுள்ள சத்துக்கள் நிறைய அழிந்து விடும். கூழ் காய்ச்சிய பிறகு, கடைசியாக ஃபார்முலாவை கலந்து ஊட்ட வேண்டும்.
குழந்தைக்கு முதன்முறையாக உணவை கொடுக்கும்போதே இந்த அளவு கொடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு திணிக்கக்கூடாது. சில குழந்தைகள் 6 மாதங்கள் வரை திட உணவு சாப்பிட தயாராகாது. குழந்தையின் விருப்பத்தை புரிந்து கொண்டு உணவு புகட்ட வேண்டும். இதற்கு கொஞ்சம் பொறுமை தேவைப்படும். ரெடிமேட் உணவுகளை விட, வீட்டில் தயாரித்துக் கொடுக்கும் உணவே எப்போதும் சிறந்தது. அரிசி கூழ் முதல் உணவாக கொடுக்க ஏற்றது. நன்கு வெந்த சாதத்தை 1/2 கப் தண்ணீரில் நன்கு அடித்து, வடிகட்டி கஞ்சி போல் செய்து முதல் நாள் ஒரு ஸ்பூன் அளவு கொடுக்கலாம். விரும்பினால் ஒரு மேசைக்கரண்டி வரை கொடுக்கலாம். அதனையே முதல் நான்கு நாட்களுக்கு கொடுத்துப் பார்க்க வேண்டும். பிறகு அதனை மெல்ல 4 மேசைக்கரண்டி என்ற அளவில் அதிகப்படுத்தி கொடுக்கலாம். முதல் சில வாரங்களுக்கு காலை வேளையில் மட்டும் கொடுத்து, பின்னர் மெல்ல இரவிலும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது கேழ்வரகு, கோதுமை கூழ் போன்றவை. கேழ்வரகை முதல் நாள் இரவே தண்ணீரில் 1/2 கப் அளவில் ஊறவிட்டு, அடுத்த நாள் கழுவி வடித்து, மிக்சியில் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பின்பு அதனை வடித்தால் கேழ்வரகு பால் கிடைக்கும். இதிலிருந்து 2 ஸ்பூன் கேழ்வரகு பாலும், பசும்பாலும் கலந்து கூழ் காய்ச்சிக் கொடுக்கலாம். மீதமான கேழ்வரகு பாலை 3 நாள் வரை கூட ஃப்ரிட்ஜில் வைத்து, தேவைக்கு எடுத்து கூழ் செய்து கொள்ளலாம்.
வேக வைத்த சாதத்தை மசித்து கஞ்சி போல கொடுக்கலாம். இட்லி, தோசை சாம்பார் கொடுக்கலாம். ஓட்ஸ், சத்து மாவு, ராகிப் பொடியை பாலுடன் கலந்து கூழ் போல் காய்ச்சிக் கொடுக்கலாம். சப்பாத்தியை பாலில் ஊறவைத்து மசித்துக் கொடுக்கலாம். காய வைத்துப் பொடித்த கேரள நேந்தரன் வாழைக்காய் பொடியை பாலுடன் காய்ச்சிக் கொடுக்கலாம்.
குழந்தைக்கு 6 மாதத்திற்குப் பிறகு தயிர் கொடுக்கலாம். வேகவைத்த முட்டையின் மஞ்சள் கருவை கொடுக்கலாம். 11 மாதம் முடிவடைந்தவுடன் வெள்ளைப் பகுதியையும் கொடுக்கலாம். வேக வைத்த காய்கறி, பருப்புடன் சாதமும், நெய்யும் கலந்து மசித்துக் கொடுக்கலாம்.
Baby healthy foodபலவகையான தானியங்களை கலந்து சத்து மாவு காய்ச்சி கொடுப்பார்கள். அதனுடன் சீவி காயவைத்த மரவள்ளி கிழங்கு மற்றும் சீவி காயவைத்த நேந்தரன் காயையும் சேர்த்து பொடித்து கூழ் காய்ச்சினால் மிகவும் நல்லது. மீன், ஆட்டிறைச்சி போன்றவற்றை 7 மாதத்திற்குப் பிறகு சூப்பாக முதலில் கொடுக்கலாம். பிறகு மெல்ல மிக்சியில் அடித்துக் கொடுக்கலாம். குழந்தையின் உணவில் இனிப்பு சேர்ப்பது நல்லதல்ல. அப்படி சேர்க்க விரும்பினால் வெல்லத்தை சேர்த்துக் கொடுக்கலாம். 7 மாதம் முடிந்தபிறகு கேரள நேந்தரன் பழத்தை வேக வைத்து, நடுவில் உள்ள விதையை நீக்கி அரைத்து கொடுக்கலாம். இது மிகவும் சத்தானது.
முதன்முதலாக குழந்தைக்கு உணவு கொடும்போது மிக்ஸியில் நன்கு அடித்து விட்டு பேஸ்ட் போல் செய்து (ஆப்பம் மாவு பதத்திற்கு) கொடுக்க வேண்டும். பிறகு ஒரு 7 மாதம் ஆனவுடன் மெல்ல பேஸ்ட் போல் அடிக்காமல் கைய்யாலோ ஃபோர்காலோ மசித்து விட்டு கொடுக்கவேண்டும். குழந்தை பேஸ்டாகவே சாப்பிட்டு பழகினால் பிறகு மசிக்காமல் உணவை சாப்பிடவே செய்யாது. பிறகு ஒரு வருடம் முடிவதற்கு முன்னரே மசித்து கொடுப்பதையும் நிறுத்தி விட்டு, அப்படியே சிறிய சிறிய துண்டுகளாகக் கொடுத்து சாப்பிட பழக்க வேண்டும்.
குழந்தைக்கு ஏற்ற பழ வகைகள்
வாழைப்பழம் - ஒரு (முட்)கரண்டியால் பழத்தை கட்டியில்லாமல் நன்றாக மசித்து, சிறிது பால் கலந்து கொடுக்கலாம். முதலில் கால் பழம் அளவிற்கு கொடுத்து பழக்கப்படுத்திய பிறகு, சிறிது சிறிதாக அதிகரித்து ஒரு பழம் வரை கொடுக்கலாம்.
ஆப்பிள் - ஆப்பிளை இட்லி தட்டில் வேக வைத்து, மசித்து, பாலுடன் கலந்து அல்லது அப்படியே கொடுக்கலாம். சில குழந்தைகளுக்கு ஆப்பிள் மலச்சிக்கலை உண்டாக்கிவிடும். அந்த பிரச்சனை இருந்தால் ஆப்பிளை தவிர்த்து பப்பாளி கொடுக்கலாம்.
அவக்கோடா எனப்படும் பட்டர் ஃப்ரூட்டும் மிகவும் நல்லது. இதில் கொழுப்புச் சத்து அதிகம். நன்றாக பழுத்த பழத்தை மசித்து கொடுக்கலாம். வளரும் குழந்தைகளுக்கு கொழுப்புச் சத்து மிகவும் அவசியம்.
அதனால் குழந்தைகளுக்கு கொடுக்கும் பாலில் தண்ணீர் கலப்பது சரியல்ல.
பியர்ஸ் பழத்தையும் ஆப்பிள் போலவே வேகவைத்து மசித்து கொடுக்கலாம்.
சப்போட்டாவை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். நல்ல சத்துள்ள பழ வகை அது. அதனையும் விதை நீக்கி மசித்துக் கொடுக்கலாம். constipation க்கு பப்பாளிப் பழத்தை மசித்துக் கொடுப்பது நல்ல பலனளிக்கும்.
வேக வைத்து மசித்த காய்கறிகள்:
பழங்களைக் கொடுத்து பழக்கி, 2 வாரத்திற்குப் பிறகு காய்கறிகளை கொடுக்கலாம். காய்கறிகளை நன்கு வேக வைத்து மசித்து, வடிகட்டி நீரை மட்டும் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு 7 மாதம் வரை வடிகட்டித்தான் கொடுக்க வேண்டும். ஏழு மாதங்களுக்கு பிறகு அப்படியே மசித்துக் கொடுக்கலாம்.
முதலில் 2 ஸ்பூன் விகிதம் கொடுத்து குழந்தைக்கு அது ஒத்துக் கொள்கிறதா என்பதை பார்த்துவிட்டு, பிறகு சிறிது சிறிதாக அளவை அதிகரிக்கலாம். அடர் பச்சை நிறத்தில் உள்ள கீரை வகைகள் மற்றும் கேரட், பரங்கி போன்றவை மிக நல்லது. காய்கறிகளை கொடுக்கும்பொழுது உப்பு சேர்க்க அவசியம் இல்லை. அதிலேயே தேவைக்கேற்ப சோடியம் உள்ளது. காய்கறி பழங்களை இட்லிதட்டில் ஆவியில் வேகவைத்து எடுப்பது நல்லது. அப்போதுதான் அதிலுள்ள சத்துக்கள் வீணாகாது.
இரும்புச் சத்துக்கு தேவையானது வைட்டமின் சி. அதனால் திட உணவுடன் ஆரஞ்ச் ஜூஸ் கொடுக்கலாம். முதல் சில மாதங்கள் தண்ணீர் கலந்து ஆரஞ்ச் ஜூஸ் கொடுப்பது நல்லது. புளிப்புள்ள பழ வகைகளை குழந்தைக்கு பார்த்து தான் கொடுக்கவேண்டும். சில குழந்தைகளுக்கு அது ஒத்துக் கொள்ளாது. உதட்டை சுற்றிலும் சிறிய சிவப்பு நிற பருக்கள் போல் தோன்றும்.
Baby healthy foodஒரு வயதிற்குள் நாம் வீட்டில் என்னென்ன சமைப்போமோ அதையே குழந்தையையும் சாப்பிட பழக்க வேண்டும். ஒரு வயது வரை மிளகாயை அறவே சேர்க்காமல் இருப்பது நல்லது. அதற்கு பதில் மிளகையோ(pepper), குடை மிளகாயையோ சிறிதளவு சேர்க்கலாம்.
எந்த உணவை முதன்முதலாக கொடுப்பதாயினும், நான்கு நாட்கள் கழித்துதான் வேறு ஒரு புதிய உணவைக் கொடுக்க வேன்டும். அந்த நான்கு நாட்களில் குழந்தைக்கு அந்த உணவு ஒத்துகொண்டதா, இல்லையா என்று தெரிய வரும். சில குழந்தைகளுக்கு எது சாப்பிட்டாலும் வயிறு இறுகி கான்ஸ்டிபேஷன் ஆகும். அந்த குழந்தைகளுக்கு காலையில் எழுந்து பால் கொடுப்பதற்கு பதில் இளநீர் கொடுத்தால் வயிறு இளகிவிடும். பழுத்த மாம்பழம் அல்லது பப்பாளிப் பழத்தை கெட்டியாக அடித்து, கூழ் போல் ஊட்டி விடலாம். சரியாகிவிடும்.
ஒவ்வாமை
குழந்தைகளுக்கு சில சமயம் உணவுகளால் ஒவ்வாமை ஏற்படலாம். அதனால் தான் ஒரு புதிய உணவு கொடுத்து நான்கு நாட்கள் காத்திருந்து, வேறு புதிய உணவை கொடுக்க சொல்கின்றார்கள். சில குழந்தைகளுக்கு அது உயிருக்கே ஆபத்தாகக் கூடிய அளவுக்கு கூட ஒவ்வாமை ஏற்படும்.
குறிப்பாக முட்டை, பசும்பால் போன்றவை சில குழந்தைகளுக்கு சுத்தமாக சேராது. உணவு கொடுக்கும்பொழுதே அல்லது சில மணி நேரத்துக்கு பிறகு வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, உடம்பில் பருக்கள் அல்லது சிவப்பு நிற திட்டுக்கள் தோன்றுதல், உதடு வீக்கம், சுவாசக் கோளாறு போன்றவை தோன்றினால் என்ன உணவு கொடுத்தோம் என்று யோசிக்க வேண்டும். குழந்தை மிகவும் அசௌகரியம் காட்டத் தொடங்கினால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
உதாரணத்திற்கு எனக்கு தெரிந்த குழந்தைக்கு முட்டை சேராது. முதன் முறையாக முட்டை கொடுக்கும்போது அழத் தொடங்கி, பிறகு தொண்டை அடைத்து மூச்சு திணறத் தொடங்கிவிட்டது. அதனால் அது போன்ற உணவுகளை முதல் நாள் 1/2 ஸ்பூன் மட்டுமே கொடுத்து பார்க்க வேண்டும். தேனை குழந்தைக்கு ஒரு வயது வரை கொடுக்க கூடாது என்பார்கள். என்றாலும் நம் ஊரில் அதனை கொடுப்பார்கள். அப்படி கொடுக்கும்பட்சத்தில் சிறு தேனீயின் தேனை வாங்கி குழந்தைக்கு கொடுக்கலாம். அது குழந்தைக்கு மருந்தாகும்.
உணவு சாப்பிட மறுத்தால்
Baby healthy foodசில குழந்தைகள் உணவை விழுங்காமல் நாக்கால் வெளியே தள்ளிவிடும். இந்த செய்கையினால் சோர்ந்து போகாமல் அப்போதைக்கு நிறுத்தி விட்டு, ஒரு வாரம் கழித்து மீண்டும் முயற்சிக்கலாம். குழந்தைகள் இயல்பிலேயே வாயில் படும் பொருட்களை வெளியில் தள்ள முயற்சி செய்யும். நாளடைவில் அந்த பழக்கம் மாறிய பின்னர் உணவை முழுங்கத் தொடங்கும்.
சில குழந்தைகளுக்கு முதன்முறை ஸ்பூனால் கொடுக்கும்பொழுது பிடிக்காமல் போகலாம். உணவை சாப்பிட மறுத்தால், நமது ஆள்காட்டி விரலை நன்கு சுத்தமாக கழுகி அதில் உணவை சிறிய அளவில் தடவி குழந்தைக்கு கொடுக்கலாம். உணவு சுவை பழகிய பின்னர் ஸ்பூன் கொண்டு கொடுக்கலாம்.
ஸ்பூன்கள் கொண்டு உணவு கொடுக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். சிறுகுழந்தைகள் படுவேகமாக கையால் தட்டிவிடும். அப்போது குழந்தையின் வாயில், முகத்தில் பட்டுவிட வாய்ப்புள்ளது. அதனால் கூர்மையான, வெட்டும்படி உள்ள சில்வர் ஸ்பூன்களை உபயோகித்தல் கூடாது. குழந்தைகளுக்கென்றே உள்ள பிரத்தியோக குட்டி ப்ளாஸ்டிக் ஸ்பூன்களை பயன்படுத்துவது பாதுகாப்பானது.
சில குழந்தைகள் கூழாகவே சாப்பிட விரும்புவார்கள். சிறிய கட்டிகள் தென்பட்டால் அல்லது சிறிது கட்டியாக இருந்தாலும் சாப்பிட மறுப்பார்கள். மெல்ல அரைத்து ஊட்டுவதை நிறுத்த வேண்டும் என்றாலும், கெட்டியான உணவை விடாப்பிடியாக ஊட்ட முயன்றால் குழந்தைக்கு சாப்பிடுவதில் ஆர்வம் இல்லாமல் போய்விடும். அது சாப்பிட மறுத்து, அதனால் அதற்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும் அபாயம் உள்ளது. எனவே எதையும் கட்டாயப்படுத்தாமல், அதன் போக்கிலேயே சென்று கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேண்டும். இப்போது அரைத்த உணவையே கொடுத்து மூன்று நாட்களுக்கொருமுறை ஒவ்வொரு ஸ்பூன் கெட்டியாக மசித்ததையும் கொடுத்து பழக்க வேண்டும்.
Baby healthy foodநன்றாக சாப்பிடும் சில குழந்தைகள் திடீரென சாப்பிடாமல் இருப்பது அல்லது விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒன்றை திடீரென சாப்பிட மறுப்பது என்பது குழந்தையின் சுபாவம். குழந்தை மறுத்து தலையை திருப்பவோ, துப்பவோ, அழுகவோ செய்தால் நிறுத்தி விட்டு சிறிது நேரத்திற்கு பிறகு கொடுத்து பார்க்க வேண்டும். உணவில் ஆர்வமில்லாத குழந்தைகளை நாம் சாப்பிடும்பொழுது பக்கத்தில் அமர வைத்து சாப்பிட்டால், அதை பார்த்து அவர்களுக்கும் சாப்பிடும் ஆர்வம் வரும்.
குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க தொடங்கும் வரை தண்ணீரே தேவையில்லை என்றாலும், முன்பே தண்ணீர் அடிக்கடி கொடுக்காமல் விட்டால் பின்னாளில் தண்ணீர் குடிக்கவே மாட்டார்கள். எனவே நன்கு காய்ச்சி ஆற வைத்த நீரை அவ்வபோது கொடுத்து பழக்க வேண்டும்.

குழந்தை வளர்ப்பு



பாலூட்டுதல்
baby feeding
இந்த பூமியில் அவதரிக்கும் ஒவ்வொரு குழந்தையின் முதல் உணவு தாய்ப்பாலாக இருக்க வேண்டும். குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே அதற்கு தாய்ப்பால் கொடுக்க தொடங்கிவிடலாம். மற்ற எந்த உணவிலும் இல்லாத அளவிற்கு, தாய்ப்பாலில்தான் அதிகச் சத்துக்கள், என்சைம்ஸ், ஹார்மோன்ஸ், வளர்ச்சி காரணிகள், விட்டமின் சத்துக்கள், நோய் எதிர்ப்பு சக்தி எல்லாம் அடங்கியுள்ளது. குழந்தை பிறந்து, குறைந்தது ஆறு மாதம் வரையிலாவது, கண்டிப்பாக தாய்ப்பால் புகட்டல் வேண்டும். தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, தாய்மார்களுக்கும் நன்மை தரக்கூடியது. பாலூட்டுதல் தாய்மார்களுக்கு ஒரு சுகமான அனுபவமாக இருப்பதோடு, குழந்தையுடனான பிணைப்பினை அதிகரிக்கவும் செய்கிறது.
பால் புகட்டலில் தாய்மார்கள் சந்திக்கும் பிரச்சனைகள்
குழந்தைக்கு பாலை உறிஞ்சத் தெரியவில்லை என்பது சிலரின் குறையாக இருக்கும். பிறக்கும் குழந்தைகளுக்கு இயல்பிலேயே வாயில் வைக்கும் எதையும் உறிஞ்சும்(சப்பும்) குணம் இருக்கும். சில குழந்தைகள் விதிவிலக்காக ஆரம்பத்தில் தடுமாறலாம். ஆனால், பழக்கத்தில் எல்லா குழந்தைகளுக்கும் அந்த பழக்கம் வந்துவிடும். பாலை உறிஞ்சத் தெரியவில்லை என்று தொடர்ந்து வேறு வழிகளில் பால் புகட்டக்கூடாது. தாய்ப்பால் அதிகம் சுரப்பதற்கும் குழந்தைகள் பாலை உறிஞ்சுக் குடித்தல் அவசியமான ஒன்று. எனவே, பால் புகட்டலை பழக்கத்தில் உண்டு செய்யவேண்டும்.
நிறைய பேரின் மற்றொரு கவலை, பால் பற்றவில்லை என்பது. தாய்ப்பால் சுரக்க என்ன வழி என்ற கேள்வியை அனைவரிடமும் கேட்டு கொண்டிருப்பார்கள். குழந்தை பெற்றவர்கள் அனைவரும் தங்களது உணவு விசயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தாங்கள் சாப்பிடும் உணவே பாலாக குழந்தைக்கு செல்கின்றது என்பதையும், அது நல்ல உணவாக இருக்க வேண்டும் என்பதிலும் நிறைய அக்கறை காட்ட வேண்டும்.
healthy food
சத்தான உணவுகள், எண்ணெய், காரம் குறைவான உணவுகள் எடுத்துக்கொள்ளுதல் நலம். வழக்கமாய் சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிட வேண்டும். உணவில் அதிக அளவில் பருப்பு சேர்த்துக்கொள்ளுதல் அவசியம். அசைவம் சாப்பிடுபவர்கள் முட்டை, மீன் நிறைய சாப்பிடலாம். ட்ரை ப்ரூட்ஸ், நட்ஸ், முந்திரி, பாதாம் போன்றவை சாப்பிடுவதும் பால் சுரப்பிற்கு உதவிடும். பால் சுறா மீன் அல்லது கருவாடு சமைத்து அடிக்கடி சாப்பிடவும். பூண்டு அதிகம் சேர்த்துக்கொள்வதும்
பால் அதிகம் சுரக்க வழி செய்யும். பூண்டினை நறுக்கி நெய்யில் வறுத்து, சிறிதளவு சாதத்துடன் சேர்த்து தினமும் சாப்பிடலாம். இதைத் தவிர தினமும் குறைந்தது முக்கால் லிட்டர் பசும்பால் குடித்தல் வேண்டும். பாலுடன் மதர் ஹார்லிக்ஸ் போன்ற மாவுக்களை கரைத்து குடித்தல் இன்னமும் சிறப்பானது.
பால் கொடுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.
எப்போதும் உட்கார்ந்த நிலையில் பால் கொடுக்க வேண்டும். படுத்துக்கொண்டே பால் கொடுத்தால், குழந்தையின் கழுத்து ஒருபுறமாக சாய்ந்து, பால் உறிஞ்ச சிரமம் உண்டாகும். குழந்தைக்கு கழுத்து வலியையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல், படுத்த நிலையில் இருப்பதால், தாயும், குழந்தையும் அப்படியே உறங்கிவிடும் வாய்ப்பு உள்ளது. இதனால் பால் குழந்தையின் மூக்கில் ஏறி, விபரீதங்கள் உண்டான சம்பவங்கள் நிறைய நடக்கின்றன. பால் கொடுக்கும்போது தாயானவள் கண்டிப்பாக உறங்கக்கூடாது. அதேபோல் குழந்தை பால் குடிக்கும்போது உறங்கிவிட்டால் உடனடியாக குழந்தையை மார்பில் இருந்து விலக்கி, தூங்க வைக்கவேண்டும்.
அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்கள், சில காலத்திற்கு குழந்தையை தூக்கி பால் கொடுத்தல் இயலாது. இவர்களுக்கு படுத்த நிலையில் பால் கொடுத்தல்தான் எளிதானது. அப்படி கொடுக்கும்பட்சத்தில், மேலே சொன்ன விசயங்களில் எச்சரிக்கையாய் இருத்தல் வேண்டும். அதுமட்டுமன்றி, கூடிய விரைவில் அந்த பழக்கத்தில் இருந்து மாறுதல் வேண்டும்.
baby
பிறந்த குழந்தைக்கு தலை நிற்கும் வரை மிகவும் எச்சரிக்கையாகவே பால் கொடுக்க வேண்டும். கழுத்துப் பகுதிக்கு கீழ் கையைக் கொடுத்து, கழுத்தை இறுக்காமல், தலையையும் முதுகையும் தாங்கியபடி குழந்தையை பிடித்துக்கொண்டு, அணைத்தவாறு, தலையை சற்றே தூக்கிய நிலையில் வைத்து கொடுக்க வேண்டும். குழந்தையின் மூக்கு பகுதி மார்பில் மிகவும் அழுந்தக்கூடாது. குழந்தையை நேர்மட்டத்தில் வைத்து பால் கொடுக்கும்போது புரையேறும் வாய்ப்புள்ளது. எனவே குழந்தையின் தலை சற்று உயரத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
குழந்தையை இழுத்துப் பிடித்து மார்பில் அழுத்தி பால் கொடுத்தல்கூடாது. குழந்தை படுத்திருக்கும் மட்டத்திற்கு குனிந்து பால் கொடுக்க வேண்டும். அல்லது குழந்தைக்கு மார்பு எட்டும் உயரத்திற்கு மிருதுவான தலையணையை வைத்து, அதில் குழந்தையை வைத்து பால் கொடுக்கலாம். மார்பகத்தின் எடை முழுவதும் குழந்தையின் முகத்தில் இறங்கிவிடாதவாறு எச்சரிக்கையாய் கொடுக்கவும்.
குழந்தை பால் குடித்தவுடன், தோளில் சாய்த்து பிடித்தவாறு அதன் முதுகில் மெதுவாக தட்டிக்கொடுக்கவும். குழந்தைக்கு ஏப்பம் வரும் வரை இப்படி செய்யவும்.
குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு முன்பும், கொடுத்த பிறகும், மார்பகத்தை மிதமான வெந்நீரில் நனைத்த துணியைக் கொண்டு நன்றாக துடைத்துவிட வேண்டும். குளிக்கும்போது அதிக மணம் தரும் சோப்பு உபயோகிப்பதை தவிர்க்கவும். மார்பகத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
குழந்தைகள் அதிக நேரம் உறங்குவதாலும், உடற் செயல்பாடுகள் மிகவும் குறைவு என்பதாலும், வெறும் பால் மட்டும் குடிப்பதால் செரிமான பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதற்கு மருத்துவர்கள் தரும் மருந்தினை தொடர்ந்து கொடுத்து வரவும். நன்கு காய்ச்சி, ஆற வைத்த நீரை ஒரு தேக்கரண்டி அளவிற்கு தினமும் பருகக் கொடுக்கலாம். அப்படிக் கொடுக்கும்போது சிறிது சிறிதாக கொடுக்க வேண்டும்.
தவிர்க்க இயலாத சில காரணங்களால், சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுத்தல் இயலாது போய்விடும். தாய்பால் கொடுத்தால் அழகு குறைந்துவிடும் என்று கொடுக்காமல் இருப்போரை நாம் கணக்கில் கொள்ள வேண்டாம். தாய்ப்பால் கொடுக்க இயலாதவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி பார்முலா மில்க் கொடுக்கலாம்.

வெள்ளி, 3 டிசம்பர், 2010

தலைமுடி

தலைமுடி
முடி உதிரும் பிரச்சனை, பொடுகுத் தொல்லை, வழுக்கை என்று பலருக்கும் தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றது, குழந்தையின் க்ராடில் க்ராப்பிலிருந்து வயதானவர்கள் வரை தலை முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏராளம். காலம் காலமாக நமது வீடுகளில் பல இயற்கை முறைகளை பின்பற்றி வந்தாலும், தலைமுடி பிரச்சனை இன்னமும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. முக்கியமாக வெளிநாடு செல்பவர்கள், எனக்கு இந்த தண்ணீர் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறது என்று சொல்லக் கேட்டிருக்கின்றோம். ஓரளவிற்கு தண்ணீரால் முடி கொட்டும் என்பது உண்மையென்றாலும், நாம் சாப்பிடும் உணவு, கடைபிடிக்கும் சில வழிமுறைகள் மூலமாக இந்தப் பிரச்சனையை தவிர்க்கலாம்.
baby bath
தொட்டிலில் தொடர்ந்து படுப்பதால், பிறந்த குழந்தைகளுக்கு பொடுகு தொல்லை ஏற்படும். இதனை போக்க தலையில் எண்ணெய் வைத்து 10 நிமிடம் போல் ஊறவிட்டு பிறகு அலசவேண்டும். தொட்டில் துணியை அடிக்கடி மாற்ற வேண்டும். ஒரே இடத்தில் தொடர்ந்து தூங்கினால் சிறிது இடம் மாற்றிப் போடவேண்டும்.
தலைமுடி உதிரும் பிரச்சனைக்கு ஆண்களைப் பொறுத்த வரை பரம்பரையும் ஒரு காரணமாக இருக்கிறது. அதற்கு ஹேர் வீவிங் போன்ற சில சிகிச்சை முறைகளைத்தவிர வேறு எந்த மருந்தும், உணவும் தீர்வாக சொல்லப்படவில்லை. சின்ன வெங்காயம் தடவுவது, மூலிகை எண்ணெய் தடவுவது போன்ற சிகிச்சை முறைகள் சொல்லப்பட்டாலும் அதன் பலன் 100% இருப்பதாக யாரும் சொல்ல முடியாது. பெண்களைப் பொறுத்தவரை வழுக்கை என்ற விஷயம் இல்லாவிட்டாலும் முடி கொட்டுவது என்பது பொதுவான பிரச்சனையாக இருக்கிறது. முடி கொட்டுவதற்கு நாம் உட்கொள்ளும் உணவும் நல்ல சமச்சீரான, சத்தான உணவாக இருப்பது அவசியம். தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கும், இரத்த சோகை இருப்பவர்களுக்கும் முடி கொட்டுதல் அதிகமாக இருக்கும். மருத்துவரை கலந்து ஆலோசித்து அவர் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றுவதே இதற்கு நல்ல தீர்வு. நாம் கூந்தலை சரியான முறையில் பராமரிக்கும் போது முடி கொட்டுவதை தவிர்க்கலாம். பொடுகு தலையில் இருந்தாலும் முடி கொட்டும்.
Hair care
தலையை வாரம் இரு முறை அலசினால் போதுமானது. ஷாம்பூ போட்டு அலசும் போது நமது முடி இழக்கும் ஈரப்பதத்தை மீண்டும் ஈடுகட்டவும், முடியின் pH அளவை சமச்சீராக வைத்திருக்கவும், முடி ஸ்மூத்தாக இருக்கவும் கண்டிஷனர்(conditioner) உதவுகிறது. கண்டிஷனரை வேர்க்கால்களில் படாமல் அப்ளை செய்வது நல்லது. மேலோட்டமாக மண்டையில் படாமல் ( 1 செ.மீ அளவேனும் இடைவெளி விட்டு) முடிக்கு மட்டும் படுமாறு கண்டிஷனர் அப்ளை செய்தால் முடி கொட்டாமல் ஸ்ட்ராங்காக இருக்கும். அடிக்கடி அல்லது தினமும் தலை குளிப்பவர்கள் மிகவும் மைல்டான ஷாம்பூ உபயோகிப்பது நல்லது. இப்போது டெய்லி கேர் ஷாம்பூக்கள் (daily care shampoo) பல மார்க்கெட்டில் கிடைக்கின்றன. தினமும் கண்டிஷனர் உபயோகிப்பது நல்லதல்ல. ஆண்ட்டி டாண்ட்ரப் ஷாம்பூக்களை தினமும் உபயோகப்படுத்துவது முடியை பாதிக்கும். வாரம் ஒரு முறை உபயோகப்படுத்தினால் போதுமானது. தலைக்கு அடிக்கடி பெர்மிங் (perming), ஸ்ட்ரெயிட்னிங் (straightening) என்று ப்யூட்டி ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொள்வதும் முடியை பாதிக்கும்.
Hair treatment
வீட்டிலேயே சீயக்காய் தயாரித்துக் கொள்ள கீழ்க்கண்ட பொருட்களை சேர்த்து அரைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சீயக்காய்- 1 கிலோ
செம்பருத்திப்பூ- 50
பூலாங்கிழங்கு( நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். ஷாம்பூ போல நுரை வரும்) - 100 கிராம்
எலுமிச்சை தோல் (காய வைத்தது. பொடுகை நீக்கும்)- 25
பாசிப்பருப்பு (முடி ஷைனிங்குக்கு) - கால் கிலோ
மருக்கொழுந்து (வாசனைக்கு) - 20 குச்சிகள்
கரிசலாங்கண்ணி இலை(முடி கருப்பாக) - 3 கப் அளவு
மேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் வெறும் தண்ணீர் மட்டும் கலந்து தலைக்கு தடவி அலசலாம். சாதக் கஞ்சி தேவையில்லை. வெளிநாட்டில் இந்தப் பொருட்கள் கிடைப்பது அரிது.
பொடுகை நீக்க எத்தனையோ வழிமுறைகள் இருந்தாலும் பெரும்பாலானோர் புலம்புவது ஏன் இத்தனை ட்ரீட்மெண்ட் எடுத்தும் மீண்டும் மீண்டும் பொடுகு வருகிறது என்றுதான். நன்றாக கவனமாக இருந்தோமென்றால் நிச்சயம் பொடுகை அறவே ஒழிக்க முடியும். பொடுக்கு எத்தனையோ ஆண்ட்டி டாண்ட்ரஃப் ஷாம்பூக்கள் இருக்கின்றன. Head & Shoulder, Clinic All clear மற்றும் மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஷாம்பூக்கள் என்று அத்தனையுமே பொடுகை நீக்கினாலும் நாம் கவனமாக இல்லாவிட்டால் மீண்டும் வந்துவிடும். இயற்கையான ட்ரீட்மெண்ட் என்றால் எலுமிச்சை சாறு மிகச்சிறந்த மருந்து. தலையில் தடவும்போது எரிச்சல் ஏற்படும். ஆனால் பொடுகை அறவே நீக்கும். மிளகு அரைத்து தயிரில் கலந்து தடவுவதும் நல்ல பலனை தரும்.
பொடுகுக்கு ட்ரீட்மெண்ட் எடுக்க வேண்டும் என்று நினைத்தவுடன் முதலில் அதனை மீண்டும் வர விடாமல் இருக்க செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுங்கள். சீப்பு, பெட்ஷீட், போர்வை, துண்டு, தலையணை உறை எல்லாவற்றையும் கழுவி அல்லது புதிதாக உபயோகப்படுத்துக்கள். இல்லாவிட்டால் நீங்கள் ட்ரீட்மெண்ட் எடுத்த பிறகு சீப்பு வழியாகவோ, தலையணை மூலமாகவோ மீண்டும் பரவிவிட வாய்ப்பு அதிகம். தலை மிகவும் வறண்டு இருந்தாலும் பொடுகு வரும். கண்டிஷனரை தலையில் முடி வேர்வரை போட்டாலும் பொடுகு வரும்.
Hair combing
முடியை பெர்மிங் செய்வதாக இருந்தாலும், ஸ்ட்ரெயிட்னிங் செய்வதாக இருந்தாலும், வீட்டில் நீங்களாகவே முயற்சிப்பதற்கு முன்பு, சலோன் (parlour) சென்று ஆலோசனை பெறுங்கள். ஒவ்வொரு முடியும், முக அமைப்பும் வேறு. ஒருவருக்கு பொருந்தின ஹேர் ஸ்டைல் இன்னொருவருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. முடியின் தன்மை, முகவெட்டுக்கு தகுந்தாற்போல் ஹேர்ஸ்டைல் செய்துக் கொள்ளுங்கள். நம்மால் பராமரிக்க முடிந்த ஹேர் ஸ்டைல் செய்து கொள்வது நல்லது.
அதிக ஃப்ரிஞ்சஸ், ஸ்டெப் கட், லேயர்ஸ் போன்றவை எல்லோராலும் எளிதாக பராமரிக்க முடியாது. ஒரே ஹேர் ஸ்டைலில் இல்லாமல் வித விதமான ஹேர்ஸ்டல் செய்து கொள்வது எப்போதும் ஒரு புதிதான தோற்றத்தை கொடுக்கும். இழுத்துப் பிடித்து சடை போட்டுக் கொள்வது பிடிக்கிறது. அதையேதான் பின்பற்றுவேன் என்று இல்லாமல் ஒரு வித்தியாசத்திற்கு மாறுதலான ஒரு ஹேர்ஸ்டைல் செய்து பாருங்கள். சில ட்ரெஸ்களுக்கு லூஸ் ஹேர் மிகவும் அழகாக இருக்கும். அப்படி லூஸ் ஹேர் வேண்டுமென்றால அதற்கு ஒன்று ஹேரை ஸ்ட்ரெயிட்னிங் செய்து செட் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் முடி பறக்காவண்ணம் செட் செய்வதற்கென்றே உள்ள ஸ்ப்ரே அல்லது க்ரீம் உபயோகப்படுத்தலாம். ஆனால் வேர்க்கால்களில் படாமல் உபயோகிக்க வேண்டும். தலை குளிப்பதால் இழக்கும் முடியின் ஈரப்பதத்தை பாலன்ஸ் செய்ய இப்போது ஹேர் ஸ்ப்ரே, மூஸ் (mousse) என்று பல ரகங்கள் கிடைக்கின்றன. அவற்றில் உங்களது சலோன் கண்சல்டண்டின் ஆலோசனை கேட்டு உங்கள் கூந்தலுக்கேற்ற தயாரிப்பை வாங்குங்கள்.
சில இயற்கை முறைகளைப் பற்றியும் குறிப்பிட விரும்புகிறேன். நல்லெண்ணெய் உடல் சூட்டை குறைப்பதுடன் முடியை கருப்பாக்க மிகவும் உதவும். ஆனால நல்லெண்ணெய் முகத்திற்கு போடுவது சரும நிறத்தை கருமையாக்கும். விளக்கெண்ணெய் கண் புருவம், இமை முடிகள் வளர தடவலாம். முட்டை முடிக்கு நல்ல ஷைனிங் தரும். அடிக்கடி உபயோகித்தால் முடி வறண்டு விடும். பேரிச்சை, கீரை போன்ற இரும்பு சத்து நிறைந்த உணவுகள் முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. நெல்லிக்காயை காயவைத்து பொடி செய்து சீயக்காயுடன் சேர்த்து இயற்கையான கருமை நிறத்துக்கு உபயோகிக்கலாம். மருதாணி முடிக்கு மிகவும் நல்லது. இயற்கையான சாயத்திற்கும், குளிர்ச்சிக்கும் மிகவும் நல்லது. உப்புத் தண்ணீர், சூடான தண்ணீர் போன்றவை முடிக்கு நல்லதல்ல.
hair care kit
பேன் பிரச்சனைக்கு மருந்து போடுவது நல்லது. பொடுகு ட்ரீட்மெண்ட் போலவே இதற்கும் ட்ரீட்மெண்ட்டுக்குப் பிறகு கவனமாக தலையணை உறை முதற்கொண்டு மாற்றுவது அவசியம். ஏதேனும் விசேஷங்களுக்கு இடிமுடி வைத்து பின்னுவதாக இருந்தாலும் தரமானதாக உபயோகியுங்கள். முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள். கரிசலாங்கண்ணி இலை, நெல்லிக்காய், கருவேப்பிலை மூன்றையும் அரைத்து வடைகளாகத் தட்டி நிழலில் காயவைத்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து அந்த எண்ணெயை தலையில் தடவி வந்தால் முடி கருமையாக நன்றாக இருக்கும். சூடத்தை (கற்பூரம்) தேங்காய் எண்ணெயில் போட்டு தடவி வந்தால் பொடுகு நீங்கும். வெந்தயத்தை தேங்காய் எண்ணெயில் போட்டு ஊறவைத்து அதனை தலைக்கு தடவினால் உடல் குளிர்ச்சிக்கு நல்லது.
நல்ல தூக்கம், நல்ல சாப்பாடு, நல்ல தண்ணீர், நல்ல பராமரிப்பு தலை முடிக்கு மிகவும் அவசியம். எவ்வளவு அழகான முகமாக இருந்தாலும் ஹேர்ஸ்டைல் நன்றாக இல்லாவிட்டால் எடுப்பாக இருக்காது. நல்ல மேக்கப்பையும் மோசமான ஹேர்ஸ்டைல் பாழ்பண்ணிவிடும். எனவே தலை முடிக்கு தனியான கேர் கொடுப்பது மிக அவசியம். யாருக்கு என்ன ஸ்டைல் நன்றாக இருக்கும் என்று நான் இங்கே குறிப்பிடவில்லை. காரணம், ஸ்டைலை விட அதை மெயிண்டெயின் பண்ணுவது முடியுமா என்ற விஷயத்தை யோசித்துவிட்டு தேர்ந்தெடுப்பது அவசியம்.

முகம் கண்கள்


முகம்
நம் உடம்பில் மற்ற எல்லா பாகங்களையும் விட நாம் முக்கியத்துவம் கொடுப்பது நம் முகத்திற்கு மட்டுமே. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போன்ற பழமொழிகளும், வட்ட நிலா என்று கவிதைகளும் முகத்தினை பிரதானமாக்கிப் புனையப்படுகின்றன. முகம் பளிச்சென்று இருந்தால் உடம்பின் மற்ற பாகங்களில் உள்ள குறைபாடுகள் அவ்வளவாக தெரிவதில்லை. அப்படி நமது உடம்பின் கண்ணாடியென இருக்கும் முகத்தை எப்படி பராமரிப்பது என்று பார்ப்போம். முகம் என்றதும் பொதுவான ஒரு உறுப்பாக கருதாமல் கண், புருவம், மூக்கு, கன்னம், உதடு, தாடை, நெற்றி, காது என்று ஒவ்வொரு உறுப்பிற்கும் தனி கவனம் எடுத்து பராமரிக்க வேண்டும். இவையெல்லாம் சேர்ந்துதான் நம் முகத்தின் அழகு வெளிப்படுகிறது. இந்த வாரம் கண்ணைப் பற்றி பார்க்கலாம்.


கண்கள்
Eyes "கண்களின் வார்த்தைகள் புரியாதா" என்று கண்கள் நமது உணர்ச்சிகளை வெளிகாட்டும் ஒரு உறுப்பாக இருக்கிறது. கண்களை பராமரிப்பது என்பது மிகவும் கவனமாக செய்யவேண்டிய ஒன்று. கண்களை சுற்றி இருக்கும் தோல் மிகவும் மென்மையானது. எந்த கெமிக்கலையும் உபயோகிக்கும் முன் அது தரமானதா என்று பரிசோதித்துவிட்டு கண்களுக்கு போடுவது மிகவும் அவசியம். கண்கள் என்றதும் கருவளையம்தான் பலருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. கண்களைச் சுற்றி கரு வளையம் ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும், அவற்றில் சரியான தூக்கம் இல்லாததே முழு முதற்காரணம் என்று சொல்லலாம். நல்ல தூக்கம் மிகவும் அவசியம். பகல் தூக்கத்தை விட இரவு தூக்கம் மிகவும் முக்கியம். இரவு தூக்கம் என்பது தொடர்ச்சியாக 8 மணி நேரமாவது இருக்குமாறு உங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளுங்கள். கருவளையம் போக்குவதற்கு இயற்கை மருத்துவத்தில் தயிர் பரிந்துரைக்கப்படுகிறது. தயிர், கஸ்தூரி மஞ்சள், தூய சந்தனம் கலந்து தினமும் கண்ணுக்கு அடியில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவினால் கண்ணின் கருவளையம் நீங்கும். உருளைக்கிழங்கின் சாறும் நல்ல பலன் தரும். உருளைக்கிழங்கை கண்ணிற்கு மட்டுமல்ல முகத்திற்கு தடவினாலும் கருமை நீங்கி சருமம் வெளுப்பாகும். பன்னீரை பஞ்சில் தோய்த்து இரவு படுக்கும் முன் கண்ணில் வைத்துக் கொண்டால், நாளடைவில் கருமை நீங்கி கண்கள் பளிச்சென்று இருக்கும். அதே போல் தரமான Under Eye க்ரீம்களும் நல்ல பலனை தரும். வயதானால் வரக்கூடிய கருவளையத்திற்கும் இப்போது தரமான க்ரீம்கள் மார்க்கெட்டில் இருக்கின்றன. பிரபலமான பிராண்டுகளில் இருக்கும் க்ரீம்களாக வாங்குவது நல்லது. தரக்கட்டுப்பாடு, பரிசோதனை என்று எல்லா கட்டங்களையும் தாண்டி வருவதால் கெடுதல் விளைவிக்க வாய்ப்பில்லை.
Eyesபேஷியல் செய்யும்போது கண்களை சுற்றி உள்ள தசைகளை மெதுவாக மசாஜ் செய்து விடுங்கள். வட்ட வடிவத்தில் மசாஜ் செய்ய வேண்டும். குளிப்பதற்கு முன்பு, சிறிது ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயில் அல்லது விளக்கெண்ணெய் கொண்டு கண்களை சுற்றி மெதுவாக மசாஜ் செய்தால் கண்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும். இப்படி செய்வதால் கண்களின் சோர்வு மற்றும் கருவளையம் நாளடைவில் மறையும். கண்களின் சோர்வு நீங்க மற்றுமொரு அருமையான இயற்கை மருந்து வெள்ளரிக்காய். இதன் சாறை கண்களை சுற்றி தடவி வந்தால் கண்களுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் கிடைக்கும். அலோவேரா ஜெல்லும் கண்ணின் கருவளையத்திற்கு மிகவும் சிறந்த மருந்தாகும். அலோவேரா சூரியனால் ஏற்பட்ட கருமைக்கும் தீப்புண்ணிற்கும் கூட சிக்கிச்சையளிக்க பயன்படுகிறது. கண்ணாடி தொடர்ந்து அணிவதால் கருப்பான சருமத்திற்கும் அலோவேரா மற்றும் உருளைக்கிழங்கு நல்ல பலனை அளிக்கும்.
கண் புருவம், இமை இவைகள் அழகாக இருந்தால்தான் கண்களும் எடுப்பாக அழகாக இருக்கும். கண் புருவத்தை த்ரெட்டிங் அல்லது வாக்சிங் மூலம் ஷேப் செய்து கொள்வது நமது கண்ணை கவர்ச்சியாக தெரிய வைக்கும். புருவத்தில் குறைந்த முடியே இருந்தாலும் லேசாக த்ரெட்டிங் செய்யும்போது நல்ல எடுப்பாக இருக்கும். கூடிய மட்டும் புருவத்திற்கு பென்சில் உபயோகிப்பதை தவிருங்கள். அது சாயங்கால பார்ட்டி மேக்கப் மற்றும் விசேஷங்களுக்கு மட்டுமே நன்றாக இருக்கும். போட்டோக்களிலும் அழகாக தெரியும். ஆனால் மற்ற நேரங்களில் அது முகத்திற்கு ஒரு செயற்கையான தோற்றத்தை உருவாக்கும்.
கண் இமைகளை பொறுத்த வரை அதிக முடி மற்றும் மேல் நோக்கிய இமை முடிகள் அழகான தோற்றத்தை அளிக்கும். கண் இமைகள் குறைவாக இருப்பின் அதன் அடர்த்தியை அதிகப்படுத்திக் காட்டும் மஸ்காராக்களை உபயோகிக்கலாம். செயற்கை கண் இமைகளை ஒட்டும்போது அது தரமானதா, அதற்கு உபயோகப்படும் க்ளூ தரமானதா என்று பார்த்து வாங்குங்கள். இப்போதைய பேஷன் கண் இமைகளின் மேல் கறுப்பு ஐலைனர் கொண்டு வரைந்து முனைகளை பழங்கால ஸ்டைலில் சிறிது மேல் நோக்கி வளைத்து விடுவதுதான். ஐலைனர் போட்டு கீழேயும் மை போடுவது எல்லோருக்கும் எடுப்பாக இருக்காது. கண்ணின் கீழே அதிக சுருக்கம் இருக்கிறது என்று நினைப்பவர்கள் ஐலைனரோடு கீழ் இமையில் பென்சிலும் உபயோகித்தால் சுருக்கங்கள் தெரியாது. ஐஷேடோ முக நிறத்திலேயோ, பிரவுன் நிறத்திலேயோ போடுவது இப்போதைய லேட்டஸ்ட் ட்ரெண்ட். ஐ ஷேடோவில் மூஸ், க்ரீம், ஜெல், பவுடர் என்று பல ரேஞ்சுகளில் உள்ளது. மஸ்காராவிலும் பல நிறங்கள் கிடைக்கின்றன. அவரவர் சருமத்திற்கு தகுந்த நிறத்தை காஸ்மெட்டிக் கடை கன்சல்டண்டின் உதவியுடன் தேர்ந்தெடுங்கள். சிறிதாக இருக்கும் கண்களையும் மஸ்காரா, ஐலைனர் மூலம் கவர்ச்சியாக எடுப்பாக காட்ட முடியும்.
Eyesகண்களுக்கு உபயோகப்படுத்தும் காஸ்மெட்டிக்ஸ் உதாரணமாக மஸ்காரா, காஜல் பென்சில், ஐ லைனர் போன்றவற்றை 6 மாதத்திற்கு ஒரு முறை புதிதாக வாங்குவது அவசியம். பழைய காஸ்மெட்டிக்ஸ் கண்களை பாதிக்கும். இரவு உறங்கும் முன் கண் மேக்கப்பை முழுதுமாக நீக்க வேண்டும். கண் மேக்கப்பை நீக்கவென்றே Eye Make up Remover என்று கடைகளில் கிடைக்கின்றது. பேபி ஆயில் கொண்டும் கண் மேக்கப்பை நீக்கலாம். தினமும் உறங்க செல்லும் முன் முகத்தை கழுவி விட்டு செல்வது கண்களுக்கு மட்டுமல்ல முகத்திற்கும் நல்லது. அவ்வாறு இரவில் முகம் கழுவிவிட்டு படுப்பதால் கண்ணில் வரும் கட்டிகள் போன்ற பிரச்சனைகள் அறவே அண்டாது. கண்களை அழுத்தித் தேய்ப்பது, தூசு விழுந்தால் கசக்குவது போன்றவற்றை தவிர்த்து கண்களை தண்ணீர் கொண்டு கழுவுவது நல்லது. இப்படி சில அடிப்படை விஷயங்களை ஒழுங்காக கடைபிடித்தோமென்றால் நமது கண்கள் அழகாக, பளிச்சென்று இருக்கும்.

உதடு மற்றும் வாய்

உதடு மற்றும் வாய்
இந்த வாரம் உதடுகள், பற்களின் பராமரிப்பையும், சிறப்பாக அவற்றை அழகுப் படுத்திக் கொள்வதையும் பார்ப்போம். உதடுகளை இதழ்கள்னு பூவோட சம்பந்தப்படுத்தி சொல்லும்போதே அது எவ்வளவு மென்மையான பகுதின்னு நமக்கு தெரியும். நம்ம உடம்பில் வேர்க்காத பகுதி உதடுகள்தான். உதடுகளுக்கு என்ன பெரிய கவனிப்பு தேவை, சும்மா வெடிப்புக்கு வேசலின் தடவினா போதாதான்னு கேட்கலாம். ஆனால் முகம் அழகாய் தெரிய உதடுகளின் வனப்பும் ஒரு முக்கிய காரணம். தனித்தனியா முகத்தில் ஒவ்வொரு பார்ட்ஸையும் கவனிக்க நம்மால முடியுமான்னு தோணும். தனித்தனியா கவனிக்க தேவையே இல்லை. நம்ம தினசரி வேலைகளிலேயே உதடுகளை பராமரிச்சுக்கறதுக்கான வழிகளும் இருக்கு.


காலையில் பல் விளக்குவதற்கு முன்பு டூத் பிரஷைக் கொண்டு, லேசாக உதடுகளை தடவி விட்டால் போதும். உதட்டில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி வழவழப்பாக இருக்கும். அதேபோல் முகத்துக்கு ஸ்க்ரப்பிங் பண்ணும்போது கடைசியாக உதடுகளில் ஒரு முறை தேய்த்தால் போதும். நல்ல தரமான லிப்ஸ்டிக், லிப் கிளாஸ் உபயோகித்தால் உதடுகள் நிறம் எப்போதும் மாறாமல் இருக்கும். ஏற்கனவே கறுத்துப் போன உதடுகளுக்கு க்ளிசரின் (ப்ளெயின் க்ளிசரினைக் கேட்டு வாங்குங்கள். லிப் க்ளாஸ் அல்ல) தினமும் தடவினால் கறுப்பு நீங்கி நல்ல நிறம் கிடைக்கும். பன்னீர் ரோஜாவின் சாறு அல்லது பன்னீரும் கூட நல்ல நிறம் கொடுக்கும். ஆனால் பிறவியிலேயே கருமை நிறத்தில் இருக்கும் உதடுகளுக்கு லிப்ஸ்டிக் மட்டும்தான் சரியான சாய்ஸ். அதிக வேசலின், லிப்க்ளாஸ் உபயோகம் கூட உதடுகளை கறுப்படைய வைக்கும். இயற்கையான தயிர், பாலாடை கூட வேசலினுக்கு பதிலா உபயோகிக்கலாம்.
Lipsஉதடு மட்டும் அழகா இருந்தால் நிச்சயம் போதாது. பற்களும் அழகாக, சுத்தமாக இருப்பது அவசியம். அழகான இதழ்கள் விரித்து நாம் சிரிக்கும் சிரிப்பை இன்னும் வசீகரமாக காட்ட பற்களின் பராமரிப்பு மிகவும் அவசியம். தினமும் பல்துலக்குவதோடு Floss செய்வதும் அவசியம். பற்களை வருடத்திற்கு ஒரு முறையேனும் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 30 வயதிற்கு பிறகு பற்களின் இடையே இடைவெளி தோன்ற ஆரம்பிக்கும். எப்போதும் பல் துலக்கிய பிறகு பற்களை இரண்டு விரல்களால் கீழ்ப்புறமாக (விசில் அடிப்பது போல கைவிரல்களை வைத்துக் கொண்டு) ஈறுகளில் விரல் பட அழுத்தி விடுவது அவசியம். இதனால இடைவெளி ஏற்படாமல் ஓரளவு பாதுகாக்கலாம். அதோடு கால்ஷிய சத்துக்களை தேவையான அளவு எடுத்துக் கொள்வதும் பற்களை இடைவெளியிலிருந்து காப்பாற்றும்.
இடைவெளி ஏற்பட்டதும், உடனே கால்சியம் மாத்திரகளை எடுத்துக் கொள்வதால் இதனை சரி செய்துவிட முடியாது. கால்சிய சத்து நமக்கு உடம்பில் ஒரே நாளில் ஏற்படும் விஷயமல்ல. அதற்கு நீண்ட நாட்கள் ஆகும். எனவே வரும் முன் காப்பதே சிறந்தது. வாரம் ஒரு முறை எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து பற்களை விளக்கினால் பல் பளிச்சென்று ஆகும். அடிக்கடி ஒயிட்டனிங் ட்ரீட்மெண்ட் செய்து கொள்வதைக் காட்டிலும், காப்பி, டீ அதிகம் குடிக்காமல், அப்படியே குடித்தாலும் வாயை ஒவ்வொரு உணவுக்கு பின்னும் கொப்பளித்தாலே பற்கள் கறை பிடிக்காமல் பளிச்சென்று இருக்கும். பல் இடுக்கில் உணவுத்துகள்கள் மாட்டிக் கொண்டால் எக்காரணம் கொண்டும் டூத் பிக், சேப்டி பின் என்று உபயோகிக்காமல் முடிந்த வரை Floss உபயோகித்து நீக்க வேண்டும். இடைவெளி ஏற்படாமல் இருக்க நல்ல தரமான, மெலிதான Floss உபயோகிக்க வேண்டும். மேலும் ஒயிட்டனிங் ட்ரீட்மெண்ட் அடிக்கடி செய்வதால் பல் கூச்சம் ஏற்படும். எனவேதான் அதனை அடிக்கடி செய்து கொள்ளக்கூடாது. டூத் பிரஷ் 3 மாதத்துக்கு ஒரு முறை புதிதாக மாற்ற வேண்டும்.
ஈறுகளில் ரத்தம் வடிவது, வாய் துர்நாற்றம் போன்றவற்றிற்கும் மருத்துவரை அணுகுவதே சிறந்தது. பல சமயங்களில் வாய் துர்நாற்றத்திற்கு வயிற்றில் ஏற்படும் அல்சரும் கூட காரணமாக இருக்கும். ரூட் கேனால் ட்ரீட்மெண்ட் அல்லது புதிதாக பல் பொருத்தும்போதோ முடிந்த வரை பல் கேப்பை(cap) நமது மற்ற பல்லின் நிறத்திற்கு சரியாக பொருந்துமாறு தேர்ந்தெடுத்து அதனையே பொறுத்த வேண்டுமென்று பல் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளலாம். சில்வர், கோல்ட் என்று தனியாக தெரிவதைவிட இப்படி செராமிக்கில் பல் நிறத்துக்கே கேப் போட்டுக் கொண்டால் வித்தியாசம் தெரியாது. பற்களை அழகுப் படுத்திக் கொள்வதைவிட மிகவும் முக்கியமான ஒரு விஷயம் வாய்துர்நாற்றத்தை தடுப்பது. ஏனெனில் பலருக்கு தனது வாய் துர்நாற்றமடிக்கிறதா இல்லையா என்றே தெரியாமல் இருக்கும். இவர்கள் தானாக செக் செய்து கொள்வதைக் காட்டிலும் ( தானாக கண்டுபிடிக்க தெரியாமல் இருப்பவர்கள்) குடும்ப உறுப்பினர்கள், வாழ்க்கைத் துணை போன்றவர்களிடம் கேட்பது நல்லது. இதற்காக வெட்கப்பட்டுக் கொண்டு இருந்தால் நமக்கு தெரியாமல் அடுத்தவர் நம்மைக் கிண்டல் செய்ய நாமே காரணமாகி விடுவோம்.
வெளியில் அழகு படுத்திக் கொள்வதைக் காட்டிலும், துர்நாற்றம் இல்லாமல் சுத்தமாக இருப்பதே அவசியம். சாப்பிட்ட பிறகு கிராம்பு மெல்வது கூட நல்ல பலனைத் தரும். அதிக சூடான, குளிச்சியான பொருட்களை பல்லில் படாமல் சாப்பிடுவதும் நல்லது. எலுமிச்சை, ஆரஞ்சு ஜூஸ், ஆபிள் சிடார் வினிகர் போன்றவற்றை கூட ஸ்ட்ரா கொண்டு பல்லில் படாமல் குடித்தால் பற்கள் பாதுகாக்கப்படும். இப்போது பிரஷ்ஷிலேயே டங்க் க்ளீனர் வைத்து வந்திருக்கிறது. அதனைக் கொண்டே ஈறுகளையும் மசாஜ் செய்து விட முடியும். இரவு உறங்கும் முன் பல் துலக்கும் பழக்கம் குழந்தைகளாக இருக்கும்போதே பழக்கிவிட வேண்டும். மவுத்வாஷ் உபயோகிப்பதைக் காட்டிலும் தினமும் இரு வேளை பிரஷ் கொண்டு பல் துலக்குவதே சிறந்தது.
Lipsஇப்போது அழகுப்படுத்திக் கொள்வது எப்படி என்று பார்ப்போம். உதடுகளுக்கு என்று தனி கவனம் கொடுத்து மேக்கப் போடும் நாட்களில், எக்காரணம் கொண்டும் கண்ணிற்கு அதிக மேக்கப்பை போட்டு விடாதீர்கள். அது மேக்கப்பை கெடுத்துவிடும். உதடுகளுக்கு மேக்கப் போடுவது சுலபமாக செய்யக் கூடிய விஷயமாக இருக்க வேண்டும். மேக்கப் போடும்போது முகத்துக்கு போடும் மாய்ச்சுரைசிங் க்ரீம் மற்றும் பவுண்டேஷனை உதடுகளுக்கும் லேசாக தடவி, பிறகு லிப்ஸ்டிக் போட்டால் நீண்ட நேரம் லிப்ஸ்டிக் கலையாமல் இருக்கும். லிப் ஷேப்பை மாற்றுகிறேனென்று, லிப் பென்சில் கொண்டு கோடு வரைவதற்கு முன்பு அது நீண்ட நேரம் தாக்கு பிடிக்குமா என்று தெரிந்து கொள்ளுங்கள். அப்படி நீண்ட நேரம் இல்லாத லிப் பென்சிலாக இருந்தால் உதடுகளின் உள்ளே அல்லது வெளியே உள்ள லிப்ஸ்டிக் மட்டும் தெரிந்து முகத்தை அசிங்கமாக காட்டி விடும்.
உதடுகள் பெரிதாக உள்ளவர்கள் லிப் பென்சில் கொண்டு உதடுகளை சின்னதாக்கி காட்டும்போது, முடிந்த வரை கீழ்ப்பக்க உதட்டினையே குறைத்துக் காட்டுமாறு லைன் வரையுங்கள். மேல் பக்கம் வேர்வை அதிகம் வரும் இடம். அதனால அளவை குறைத்துக் காட்ட மேல் பக்கத்தை காட்டிலும் கீழ் பக்கமே லைன் இருக்க வேண்டும். முதலில் லிப் பென்சில் கொண்டு ஷேப் வரைந்த பிறகு, லிப்ஸ்டிக் போடுங்கள். இப்போது லாங்க் ஸ்டே லிப்ஸ்டிக்குகள் பல நிறங்களிலும், தன்மையிலும் கிடைப்பதால் லிப்ஸ்டிக் போடும் முன்பு உதடுகளுக்கு பவுடர் அடிக்க தேவையில்லை. லாங்க் ஸ்டே உபயோகிக்காதவர்கள் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் உதடுகளில் இருக்க ஒரு முறை பவுடர், பிறகு லிப்ஸ்டிக், பிறகு மேலே ஒரு பவுடர் கோட்டிங், பிறகு லிப்ஸ்டிக் என்று மூன்று கோட்டிங் வரை கொடுக்கலாம். இதுவும் நீண்ட நேரம் லிப்ஸ்டிக்கை அழியாமல் வைத்திருக்கும்.
Lipsticksலிப்ஸ்டிக் போட்ட பிறகு அதிகம் எண்ணெய் பதார்த்தங்களை சாப்பிடாமல் இருப்பதும் லிப்ஸ்டிக்கை கரையாமல் வைத்திருக்கும். லிப்ஸ்டிக் போட்டு 1 அல்லது 2 நிமிடங்கள் கழித்து லிப்கிளாஸ் போட்டால் நன்றாக ஸ்மூத்தாக இருக்கும். சின்னதாக இருக்கும் உதடுகளை பெரிதாக காட்ட லிப் பென்சில் உபயோகித்து ஷேப் மாறுவதைக் காட்டிலும் ப்ளம்ப்பி லுக் தரும் லிப் ஸ்டிக்குகள் உபயோகிக்கலாம். இந்த வகை லிப் ஸ்டிக்குகள் உதடுகளை கொஞ்சம் பெரிதாக்கி காட்டும். லிப் லைனர் டார்க் கலரிலும், லிப் ஸ்டிக் அதைவிட கொஞ்சம் லைட்டான கலரிலும் உபயோகிப்பது அழகான லுக்கைத் தரும். ஆனால் இதையே மாற்றி லிப் லைனர் லைட் கலரிலும், லிப் ஸ்டிக் டார்க் கலரிலும் போட்டால் நன்றாக இருக்காது. லிப்ஸ்டிக் போட்டதே தெரியக்கூடாது, ஆனால் அந்த லுக் மட்டும் வேணும்னு நினைக்கறவங்க கூடுமானவரை Matt Finish வகை லிப்ஸ்டிக்குகளை உபயோகிக்கலாம். Gloss வெரைட்டி சின்ன வயதுக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். லிப்ஸ்டிக் ஷேடு பற்றி அறிய ஏற்கனவே மன்றத்தில் இருக்கும் என்னுடைய" இந்திய முகங்களுக்கேற்ற மேக்கப் ப்ராடக்ட்ஸ் என்ற பதிவினை பாருங்கள். கொஞ்சம் மாடர்ன் மற்றும் பெப்பி லுக்கிற்கு லிப்ஸ்டிக், லிப் லைனர் இரண்டுமே ஒரே நிறத்தில் Matt finish ல் போட்டால் பார்க்க நேச்சுரலாக இருக்கும். சிம்ரன், கேத்தரீனா கைஃப் போன்றவர்கள் இந்த வகை டெக்னிக்கில் லிப்ஸ்டிக் அப்ளை செய்திருப்பார்கள். ஆனால் லிப் க்ளாஸ் போடாமல் இருந்தால்தான் இந்த லுக் வரும்.

மூக்கு மற்றும் காது

மூக்கு மற்றும் காது
இந்த வாரம் மூக்கின் பராமரிப்பைப் பற்றியும், மேக்கப் பற்றியும் பார்ப்போம்.
Noseகிளி, குடை மிளகாய், சப்பை, கோணல், கூர்மை இப்படி பல வார்த்தைகளோடு சேர்த்து மூக்கின் தோற்றத்தினையும், அளவினையும் குறிப்பிடுகிறோம். ஆனால் எப்படிப்பட்ட ஷேப் உள்ள மூக்கினையும் ஒழுங்காக பராமரித்து, அழகாக மேக்கப் செய்து கொண்டால் ஷேப்பைப் பற்றிய கவலை தேவையில்லை. மூக்கின் பராமரிப்பு மிகவும் எளிது. ரெகுலரான பேஷியல் கூட போதும். அதுவும் முடியாவிட்டால் வீட்டில் செய்து கொள்ளும் சின்ன ட்ரீட்மெண்ட்டே போதும். மிக எளிதான மூக்குக்கான அழகுக் குறிப்பினை பார்ப்போம்.
மூக்கில் ஏற்படும் முக்கிய பிரச்சனை பிளாக் ஹெட்ஸ்தான். சிலருக்கு ஒயிட் ஹெட்ஸும் காணப்படும். இது இரண்டுக்குமே முறையான கவனிப்பு அவசியம். பிளாக் ஹெட்ஸுடன் இருக்கும் மூக்கு, அருகில் வந்து பார்ப்பவருக்கு நிச்சயம் ஒரு வித அசூசையை ஏற்படுத்தும். கடைகளில் விறகும் பிளாக் ஹெட்ஸ் ரீமூவல் ஸ்ட்ரிப்ஸ் அதிக நாட்களாக இருக்கும் பிளாக் ஹெட்ஸை முழுதுமாக நீக்காது. ஏனென்றால் நாள்பட்ட பிளாக் ஹெட்ஸ் மிகவும் அழுத்தமாக இருக்கும். எளிதாக ஸ்ட்ரைப்ஸ் மூலம் நீக்க முடியாது. எனவே ஸ்ட்ரைப்ஸை (ஒரு முறை பிளாக் ஹெட்ஸை முழுதும் நீக்கிவிட்டு) ரெகுலர் பராமரிப்புக்கு மாதம் ஒரு முறை என்று உபயோகிக்கலாம்.
நாள்பட்ட பிளாக் ஹெட்ஸுக்கு மிகவும் சரியான ட்ரீட்மெண்ட், ஆவி பிடித்தல்தான். வீட்டிலேயே பேஷியலுக்கு செய்வதுபோல் எண்ணெய்ப்பசை உள்ள நல்ல பேஸ் மசாஜ் க்ரீமை மூக்கிற்கு நன்றாக தடவி, மசாஜ் செய்ய வேண்டும். மூக்கின் பிளாக் ஹெட்ஸ் உள்ளவர்கள், விரல்களால் மூக்கின் பக்க வாட்டிலும், நுனியிலும் அதிக நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் கொதித்த நீரை ஊற்றி, நன்றாக வேர்க்கும்வரை ஆவி பிடிக்க வேண்டும். இப்போது வெளிச்சமான இடத்தில் அமர்ந்து, கண்ணாடியைப் பார்த்து பிளாக் ஹெட்ஸ் இருக்கும் இடங்களில் பிளாக் ஹெட் ரிமூவரால் (பேஷியல் கிட்டில் இருக்கும். கிடைக்காவிட்டால் ஸ்டெரிலைஸ் செய்த டீஸ்பூனின் முனை கொண்டு நீக்கலாம்) மெதுவாக அழுத்த வேண்டும். வெளியே வேரோடு வரும் பிளாக் ஹெட்ஸை டிஷ்யூவால் துடைத்து எடுத்துவிடுங்கள். இப்படியே மூக்கில் உள்ள பிளாக், ஒயிட் ஹெட்ஸ் முழுதுமாக நீக்கி விடலாம். இப்போது குளிர்ந்த நீரில் மூக்கினை நன்றாக கழுவினால் போதும். இந்த ட்ரீட்மெண்ட் செய்யும் முன்பு முகத்திற்கு ஸ்க்ரப் போடுவதென்றாலும் போடலாம். ஆனால் ட்ரீட்மெண்ட் செய்த பிறகு ஸ்க்ரப்பிங் கூடாது.
Noseரெகுலராக வாரம் ஒரு முறை முகத்தினை ஸ்க்ரப் செய்யும்போது மூக்கு பகுதியில், பக்கவாட்டில் மசாஜ் செய்தாலே ஒயிட் ஹெட்ஸ் வராது. மூக்கின் உள்ளே ஒரு சிலருக்கு அதிகமாக முடிகள் இருந்து, வெளியில் லேசாக எட்டிப் பார்க்கும். இதுவும் அழகை கெடுக்கிற விஷயம்தான். சின்னதாக புருவத்தை ட்ரிம் செய்ய உதவும் கத்தரிக்கோலை கொண்டு லேசாக ட்ரிம் செய்துவிடலாம். இதற்கென்று பிரத்யேகமான கத்தரிக்கோலும் கடைகளில் கிடைக்கும். இந்த தொல்லைகள் பொதுவாக 40 வயதை தாண்டியவர்களுக்கு அதிகம் இருக்கும். அதிக எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொள்பவர்களுக்கும், எண்ணெய்ப்பசை சருமம் உள்ளவர்களுக்கும் பிளாக் ஹெட்ஸ் அதிகம் காணப்படும். நார்மல், ட்ரை ஸ்கின் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சணை குறைவு.
மூக்கு குத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலிலேயே எந்த இடத்தில், எந்த பக்கத்தில் மூக்கை குத்த வேண்டும் என்று சரியாக மார்க் செய்து கொண்டு செயல்படுவது முக்கியம். காது போல அல்லாமல், தவறான இடத்தில் துளை போட்டுவிட்டால் முகத்தின் அழகை பாதிக்கும். துளையை மறைப்பதும் மிகவும் கடினம். மூக்கு குத்தப் பிடிக்காதவர்கள் கல்யாணத்துக்கு என்று ட்ரெடிஷனல் மேக்கப் செய்யும்போது மூக்கில் கல் ஸ்டிக்கர் கூட ஒட்டிக் கொள்ளலாம். மூக்கு குத்தாமல் செய்யப்படும் ட்ரெடிஷனல் அலங்காரங்கள் ஒரு வித முழுமையடையாததுபோல இருக்கும். அதனால் கல்யாணத்துக்கு மேக்கப் செய்பவர்கள் மிகவும் (மூக்குத்தி போடப் பிடிக்காதவர்கள்) ட்ரெடிஷனலான மேக்கப்பைத் தவிர்த்து, கொஞ்சம் மாடர்ன் லுக்கில் மேக்கப் செய்தால் அந்த குறை தெரியாது. அதே போல் கல்யாணங்களில் புல்லாக்கு (நரசிம்மா படத்தில் " ரா ரா நந்தலாலா" பாட்டு ஆரம்பத்தில் ரம்யா கிருஷ்ணன் போட்டிருப்பதுதான் புல்லாக்கு. அந்த அளவாவது மூக்கிற்கும் உதட்டிற்கும் இடைவெளி தேவை) போடும்போது நமக்கு அதற்கேற்ற முக அமைப்பு இருக்கிறதா என்று பார்த்து உபயோகிக்க வேண்டும். சரியான முக அமைப்பு (மூக்கிற்கும் வாய்க்கும் இடையே உள்ள தூரம்) இல்லாவிட்டால் மூக்கு ஒழுகுவது போல தோற்றம் ஏற்பட்டுவிடும்.
மூக்கிற்கு மேக்கப் போடும்போது நமது மூக்கு ஷேப்பை கவனித்து அதற்கு தகுந்தாற்போல் மேக்கப் செய்ய வேண்டும். சில டெக்னிக்குகளை பொதுவாக இங்கே சொல்கிறேன். சப்பையான மூக்கு உள்ளவர்கள் முகத்திற்கு பவுண்டேஷன் மற்றும் பவுடர் அப்ளை செய்த பிறகு, முக நிறத்தைவிட கொஞ்சம் ஒரு ஷேடு குறைவான டார்க் நிறத்தில் உள்ள ரூஜை மூக்கின் இரு ஓரங்களிலும், அதாவது இரு புருவத்தின் ஆரம்பங்களிலிருந்தும் மூக்கு அடிவரை, நேராக கோடு போடுவது தடவ வேண்டும். இப்போது நடுபக்கம் மட்டும் லைட்டாகவும் ஓரங்கள் பளிச்சென்று தெரியாதது போலவும் இருக்கும். சப்பை மூக்கு என்று பார்த்தால் தெரியாது. இதே போல் ஒரு பக்கம் சிறிது அகலமாகவும், ஒரு பக்கம் சரியாகவும் உள்ள மூக்கு தோற்றமுள்ளவர்கள் ஒரு பக்கம் மட்டும் இதே போல் டார்க் கலரை அப்ளை செய்தால் நன்றாக இருக்கும். பொதுவாக இந்த வகை அப்ளிகேஷனை நார்மலான மூக்கு ஷேப் உள்ளவர்களும் செய்து கொள்ளலாம். மூக்கு அழகாக தெரியும்.
இப்படி டார்க் ஷேட் ரூஜைக் கொண்டே மூக்கின் ஷேப்பினை அழகாக்கிவிட முடியும். ஆனால் இந்த வித மேக்கப் போடும்போது அடிக்கடி செய்து பார்த்து பழகிக் கொள்வது அவசியம். புதிதாக எங்கேயாவது செல்லும்போது திடீரென்று ட்ரை செய்து பார்ப்பது பல சமயங்களில் காலை வாரிவிடும். மேக்கப் செய்து பார்த்து, போட்டோ எடுத்துப் பார்த்தால் நமது மேக்கப்பின் குறைகளை நாமே கண்டுபிடித்துவிடலாம். ரூஜ் பளபளப்பில்லாத மேட் லுக் ரூஜாக இருப்பது அவசியம். ஜெல் டைப் இதற்கு சரி வராது.
அடுத்து காதுகள் பராமரிப்பினைப் பார்ப்போம். குழந்தைகளுக்கு காது குத்தும்போதே, மூக்கிற்கு சொன்னதுபோல் சரியான ஸ்பாட்டை குறித்துக் கொள்வது அவசியம். பலருக்கு வயதானால் தோடுகளை பட்டன் இன்றி போட இயலாது. அதிக கனமுள்ள தோடுகளைப் போடுவதால் துளைகள் பெரிதாகிவிடும். இதனை எளிதாக சரி செய்து கொள்ள முடியும். மருத்துவரை அணுகினால் அவர், இப்படி பெரிதாக உள்ள துளைகளில் லேசாக கீறிவிட்டு தைத்துவிடுவார். லோக்கல் அனஸ்தீஷியா கொடுப்பதால் வலியெல்லாம் இருக்காது. சில நாட்களில் துளைகள் சேர்ந்துவிடும்.
Earநம்ம ஊரில் இந்த ட்ரீட்மெண்ட் பொதுவாக எல்லா பொது மருத்துவர்களும் செய்வார்கள். அதிக எடையுள்ள தோடு மட்டுமின்றி வளையங்களை அணிபவருக்கும் இந்த பிரச்சணை ஏற்படும். தூங்கும்போது இந்த வகை தோடுகளை கழட்டி வைத்துவிடுவது நல்லது. அதேபோல் சிலர் எப்போதும் தோடுகளை அணிந்து கொண்டே, அதனை ரெகுலராக க்ளீன் செய்யாமல் இருப்பார்கள். இதனால் காதுகளில் மற்றும் தோடுகளில் அழுக்கு சேர்வது மட்டுமில்லாமல் காதின் நிறமும் கறுப்படையக்கூடும். இப்படி நேரமில்லை என்று சாக்கு சொல்பவர்கள் வாரம் ஒரு முறை தலைக்கு குளிக்கும்போதாவது தோடுகளை கழற்றி சோப் வாட்டரில் பிரஷ் கொண்டு கழுவி க்ளீன் செய்யலாம். எண்ணெய்ப் பிசுக்கு, அழுக்குகளினால் ஏற்படும் துர்நாற்றமும் போகும்.
அடுத்து முக்கியமான விஷயம் காதுகளை சுத்தம் செய்வது. தரமான பட்ஸை உபயோகித்து காதுகளை சுத்தம் செய்வது மிகவும் அவசியம். நம் ஊர்களில் கடை வாசல்களில் பரிதாபமாக தோற்றமளிக்கும் சின்ன பிள்ளைகள் விற்கும் பட்ஸினை ஒரு போதும் வாங்காதீர்கள். அவர்களிடம் பரிதாபம் ஏற்பட்டால் பணமாக வேண்டுமானால் சும்மா கொடுங்கள். ஆனால் பொருள் வாங்கி உதவி செய்கிறேன் என்று வியாதிகளை வாங்கிக் கொள்ள வேண்டாம். அதிக விலை இருந்தாலும் ஜான்சன்& ஜான்சன் போன்ற தரமான பட்சுகளை வாங்கி உபயோகியுங்கள். பஞ்சும் அப்படியே. குழந்தைகளுக்கு சின்ன பருத்தி துனியினைக் கொண்டு காதுகளை க்ளீன் செய்தால் போதுமானது அல்லது குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக உள்ள பட்ஸினை உபயோகிக்கலாம். இந்த வகை பட்ஸ்கள், முனை பெரிதாக காது உள்பக்கம் வரை போக முடியாமல் இருக்கும். எனவே பயப்படாமல் உபயோகிக்கலாம்.
காதுகளுக்கு அழகுப் படுத்துதல் என்று தனியாக எதுவும் தேவையில்லை. ஒரே ஒரு விஷயம் மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும். முகத்திற்கு மேக்கப் போடும்போது காதுகளுக்கும் சேர்த்து பவுண்டெஷன், பவுடர் தடவுங்கள். இல்லாவிட்டால் காதுகள் தனி நிறத்தில் இருக்கும். நிறைய தோடுகளை சைடு காதில் குத்திக் கொள்வதைக் காட்டிலும், பட்டன் டைப் அல்லது பிரஸ்ஸிங் டைப் வளையங்களை உபயோகித்தால் பேஷன் மாறும்போது நாமும் வடுக்கள் இல்லாமல் மாறிவிடலாம். சிறு வயதுக்காரர்கள் பார்ட்டி, கல்யாணம் என்று மேக்கப் செய்யும்போது, காதை மறைக்கும் பட்டையான மாட்டல் போடலாம். ஆனால் வயதானவர்களுக்கு இன்விசிபிள் டைப் மாட்டல்(கண்ணுக்கு தெரியாத வண்ணம்) தான் பொருந்தும். அதுவும் கூட பட்டன் போட விருப்பம் இல்லாதவர்களுக்கு ஒரு சாய்ஸ் மட்டுமே. பேஷன் தோடுகள் வாங்கும்போது ஒவ்வாமை, எடை இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு வாங்குங்கள். காது, மூக்கு பராமரிப்பு மிகவும் எளிதான விஷயம். சின்ன அக்கறை நல்ல தோற்றத்தினையும், அழகையும் கொடுக்கும்.

கைகளை பராமரிப்பது எப்படி?

கைகளை பராமரிப்பது எப்படி? Manicureஇந்த வாரம் கைகளை பராமரிப்பது எப்படி என்று பார்ப்போம். பெண்களுக்கு இன்று இருக்கும் வேலைப் பளுவில் கை, கால்களுக்கென்று தனித்தனியாக நேரமெடுத்து கவனிக்க நிச்சயம் பொறுமை இருப்பதில்லை. இதற்கென்று தனியாக இப்போது சலோன்கள் வந்துவிட்டாலும் அதற்கென்று செலவழிக்க மனமோ, பொறுமையோ பலருக்கு இருப்பதும் இல்லை. திடீரென்று ஒரு நாள் பார்க்கும்போதுதான் அய்யோ ஏன் இத்தனை நாள் கவனிக்காமல் விட்டுவிட்டோம் என்று தோன்றும். பிறகு அந்த லோஷன், இந்த ஸ்க்ரப் என்று மாற்றி மாற்றி ஒரு குறிப்பிட்ட காலம் மட்டும் உபயோகித்து விட்டு மறுபடியும் பழைய கதையையே தொடருவார்கள். இந்த விஷயத்தில் சில எளிய பழக்கங்களை பின்பற்றினால் இந்த நேரமின்மை பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம்.
முதலில் கைகளுக்கு வருவோம். திருமணமாகும் வரை பட்டுப்போல் கையை வைத்திருப்பவர்கள் பிறகு அதனைப் பற்றி பெரிதாக நினைக்காமல் பாழாக்கிக் கொள்கிறார்கள். பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, காய் நறுக்குவது, வீடு துடைக்க என்று பல விஷயங்களை அதுவரை என்றாவது ஒரு நாள் செய்தது போய் இப்போது அதுவே தினசரி கடமைகளாக ஆனபிறகு கைகளை எங்கே கவனிக்க என்று அலுத்துக் கொள்ளும் நிலைமை பொதுவாக எல்லாருக்குமே இருக்கும் . இது வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு இன்னும் பொருந்தும்.
கைகளை எப்போதும் மென்மையாக வைத்துக் கொள்ள எப்போதும் கிச்சன் சிங்க் அருகே ஒரு செட் பாத்திரம் கழுவும் கிளவுஸ்களை வைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் கை அளவுக்கு அடுத்த சைசில் இருக்குமாறு பார்த்து வாங்குங்கள். அப்போதுதான் கஷ்டப்படாமல் உடனடியாக அணிய முடியும். சிறிய அளவில் இருந்தால் கிளவுஸ் வேறா என்ற எரிச்சல்தான் மிஞ்சும். ஒவ்வொரு முறையும் ஒன்றிரண்டு பாத்திரங்களுக்காக இப்படி கிளவுஸ் மாட்ட பொறுமையில்லை என்றால் அதிக அளவு பாத்திரங்கள் துலக்கும்போது மட்டுமாவது இதனை செயல்படுத்துங்கள். எப்போதுமே கிளவுஸ் பிடிக்காது என்பவர்கள் பாமோலிவ் டிஷ் க்ளீனிங் லிக்விட்டில் 'Tough on Grease , Soft on Hands" என்று குறிப்பிட்டிருக்கும் வெரைட்டி வாங்கி உபயோகப்படுத்தலாம். மற்ற பிராண்டுகளில் இந்த தன்மையுள்ள லிக்விட் கிடைத்தாலும் வாங்கி உபயோகப்படுத்தலாம். இதுதவிர கைகளில் தண்ணீர் படாத வண்ணம் தடுக்கும், ஹெவி ட்யூட்டி செய்பவர்களுக்கென்ற உள்ள சிலிக்கான் டைப் லோஷன்களை போட்டுக் கொண்டும் பாத்திரம் கழுவலாம். Avon Brand ல் இந்த வகை ஹேண்ட் க்ரீம் உள்ளது.
எப்போதும் கிச்சன் அருகே ஒரு சின்ன சைஸ் ஹேண்ட் லோஷன்(Vaseline Brand நன்றாக இருக்கும்) இருப்பது அவசியம். பாத்திரம் கழுவி முடித்ததும் கைகளை துடைத்து உடனடியாக லோஷனை போட்டுக் கொள்ளுங்கள். இது ஸ்ப்ரே அடித்து துடைப்பது, பாத்ரூம் கழுவுவது, வீடு துடைப்பது போன்ற வேலைகளுக்கும் பொருந்தும். அதே போல் ஒவ்வொரு இரவும் உறங்கப் போகும் முன் உப்பை 2 ஸ்பூன் அளவு எடுத்து, இரு கைகளிலும் படுமாறு நன்றாக ஸ்க்ரப்பிங் செய்து கழுவி, துடைத்து, பிறகு லோஷன் போட்டுவிட்டு படுங்கள். இதை தினசரி ரொட்டீனாக வைத்துக் கொள்ளுங்கள். குளிக்கும் முன்பு முகத்துக்கு எண்ணெய் தடவி ஊறவத்து குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கைகளுக்கும் தடவி மசாஜ் செய்யுங்கள். குளித்தபின்பு மறக்காமல் ஹேண்ட் அல்லது பாடி லோஷனை தடவுங்கள்.
Manicureநகம் வளர்க்கும் பழக்கம் உள்ளவர்கள் அதனை உடையாமல் காக்க ஹேண்ட் லோஷன் உபயோகிக்காமல் ஹேண்ட் அண்ட் நெய்ல் லோஷன் உபயோகிக்கலாம். நகங்கள் உடையாமல் இருக்கும். இவர்கள் கிளவுஸ் உபயோகிப்பதும் கூட நகங்களை பாதுகாக்கும். அடிக்கடி நகம் உடைகிறது என்ற பிரச்சணை உள்ளவர்கள் Nail Strengthening Polish என்று கிடைக்கும் (நெய்ல்பாலீஷ் போன்றே இருக்கும்) லிக்விட்டை தினமும் இரவு நெயில் பாலீஷ் போன்றே நகங்களுக்கு அப்ளை செய்யலாம். மோதிரம் அணிபவராக இருந்தால் இரவு அதனை அகற்றிய (திருமண மோதிரம் அணிபவராக இருந்தால் அது தவிர மற்ற மோதிரங்களையாவது கழட்டிவிடுங்கள்) பிறகே தூங்க செல்லுங்கள். இல்லாவிட்டால் மோதிரம் போட்ட இடம் ஒரு நிறமாகவும், அங்கே ஸ்கின் இறுகி கடினமாகவும் ஆகிவிடும். கைக்கு தேவையான அத்தனை காஸ்மெட்டிக் ரேஞ்சும் Avon, Palmer, Vaseline போன்ற பிராண்டுகளில் கிடைக்கிறது.
கைகளுக்கு வேக்சிங் அல்லது எபிலேட்டர் கொண்டு முடிகளை நீக்கலாம். வேக்சிங்கிற்கு டிஸ்போசபிள் ஸ்ட்ரிப்புகளையே பயன்படுத்துங்கள். தொற்றுநோய்களை தடுக்கலாம். அப்படி நீக்கும்போது மறக்காமல் விரல்களில், மோதிரம் போடும் இடங்களில் உள்ள முடிகளையும் நீக்குங்கள். மெஹந்தி போடுபவராக இருந்தால் உடைகளுக்கு பொருத்தமான மெஹந்தி டைப்பை தேர்ந்தெடுங்கள். உதாரணமாக வெஸ்டர்ன் உடைகளுக்கு பிளாக்/ அரேபிக் மெஹந்தி டிசைன்கள் நன்றாக பொருந்தும். கைகளில் மெஹந்தி எப்போதுமே சரியாக பிடிப்பதில்லை என்று சொல்லுபவர்கள் மெஹந்தியை போட்டு காய்ந்த பிறகு ரிமூவ் செய்ய தண்ணீருக்கு பதில் எண்ணெய் உபயோகித்து, பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, 4,5 கிராம்பு போட்டு அதில் வரும் புகையை கை முழுக்க படுமாறு வையுங்கள். மருதாணி நன்கு பிடித்துக் கொள்ளும். மருதாணி கைகளில் காயும்போதே, ஒரு சின்ன கிண்ணத்தில் எலுமிச்சை சாற்றில் சக்கரையை கலந்து திக்காக வைத்துக் கொண்டு அதனை பஞ்சில் தொட்டு,கைகளில் இருக்கும் மருதாணியில் தடவுங்கள். இதுவும் மருதாணி கலர் நன்கு வர உதவும். கவரிங் அல்லது பேன்சி கடைகளில் இருக்கும் வளையல்களை அணிபவராக இருந்தால் அது உங்கள் கைகளுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகிறதா என்று டெஸ்ட் செய்து அணியுங்கள். ஏனென்றால அலர்ஜி ஏற்பட்டு தோல் நிறம் பாதிக்கப்பட்டால் மீண்டும் பழைய நிறம் வருவது கடினம்.
இப்போது வீட்டிலேயே எளிமையாக செய்து கொள்ளும் மெனிக்யூர் முறை பற்றி இங்கே பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
மெனிக்யூர் செட் அல்லது எக்ஸ்ட்ரா அட்டாச்மெண்ட் உள்ள நெயில் கட்டர்
ஹேண்ட் லோஷன்
ஸ்க்ரப்பர்
சின்ன சைஸ் பேபி பிரஷ்
ஒரு கப்பில் தண்ணீர்
சிறிது லிக்விட் சோப்
முதலில் கைகளுக்கு ஸ்க்ரப் போட்டு நன்றாக மசாஜ் செய்து கழுவுங்கள். ஈரத்தை துடைத்துவிட்டு, சிறு கப் தண்ணீரில் லிக்விட் சோப் சிறிது விட்டு நன்றாக கலந்து, அந்த நீரில் விரல் நுனிகள் அதாவது நகங்கள் முழுவதுமாக மூழ்கும் அளவு 5 நிமிடம் ஊறவிடுங்கள். இப்படி செய்வதால் கைகளில் ஓரங்களில், நக இடுக்குகளில் உள்ள அழுக்கினை முற்றிலும் நீக்க முடியும். பிறகு பிரஷ் கொண்டு நன்றாக நக இடுக்குகளிலும் ஓரங்களிலும் தேயுங்கள். கைகளை நேரடியாக டேப் வாட்டரில் சோப் கொண்டு கழுவுவதைவிட அழுக்கை நீக்க, இது சிறந்த பலன் தரும். அதே பிரஷைக் கொண்டு கை முழுவதையும் நன்றாக முக்கியமாக உள்ளங்கைகளில் தேய்த்து கழுவுங்கள். இதன் மூலம் இறந்த செல்கள் நீக்கப்படும். மிகவும் தேர்ச்சி உள்ளவர்கள் மட்டும் கை தோல் அதிகம் கடினமான இடங்களில் Corn Blade உபயோகிக்கலாம். இதை உபயோகிக்க நல்ல பயிற்சி அவசியம். சலோனிலேயே காலுக்கு மட்டும்தான் Corn Blade உபயோகிப்பார்கள். கைகளுக்கு என்றால் உபயோகிக்க மாட்டார்கள். தெரியாமல் உபயோகித்து கையில் வெட்டிக் கொள்ளாதீர்கள்.
Manicure kitCorn Blade என்பது காய்கறி தோல் சீவுவது போல் கால்களில் சேர்ந்திருக்கும் மிக கடினமான தோல்களை நீக்கப் பயன்படுவது. பார்க்கவும் சின்ன சைசில் தோல் சீவி போன்றே இருக்கும். உபயோகிக்க எளிது. முதலில் கால்களுக்கு உபயோகித்துப் பார்த்து பிறகு, கைகளுக்கு ஒரு முறை மட்டும் செய்யலாம். ஏனென்றால் கால்களில் ஷூ, செருப்பு அணிவதாலும், நமது வெயிட்டை தாங்குவதாலும் உள் பாதங்களுக்கு மாதம் ஒரு முறையாவது தேவைப்படும் Corn Blade, கைகளுக்கு ஒரு முறை உபயோகித்தாலே போதும். பிறகு நமது ஒழுங்கான கவனிப்பிலேயே கடினமான தோல் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
இப்போது நெயில் கட்டர் கொண்டு நகங்களை ஷேப் செய்யுங்கள். முனையில் அரைவட்ட வடிவில் இருக்கும் நகங்கள் எப்போதும் உள்ள ட்ரெண்ட் என்றாலும் மிக மாடர்ன் லுக் ட்ரெண்ட் இப்போது நேர்வடிவ முனையுள்ள நகங்கள்தான். இதற்கு சதுர பக்கங்களைப் போன்று மேல்புறம் ஷேப் செய்ய வேண்டும். சைடுகளில் நகத்தை ட்ரிம் செய்தாலும் மேலே குறுகலாக வெட்டிவிடக்கூடாது. நகங்களை இப்படி வெட்டிய பிறகு ஃபைல் கொண்டு ( பொதுவாக நக வெட்டியிலேயே கோடு கோடாக பின் பக்கம் அட்டாச் செய்திருக்கும்) வெட்டிய இடங்களை தேய்த்து விடுங்கள். இதனை குழந்தைகளுக்கு நகம் வெட்டும்போதும் செய்யலாம். அப்போதுதான் கீறாமல் இருக்கும். நமக்கும் நகங்கள் உடையில் மாட்டி இழுபடாது.
மெனிக்யூர் கிட்டில் உள்ள சிறிய கத்திரிக் கோல் அல்லது பேபி நெயில் கட்டர் கொண்டு விரல் முனையில் நகங்களுக்கு பக்கவாட்டில் உள்ள எக்ஸ்ட்ரா கடின தோல்களை வெட்டி நீக்குங்கள். பழக்கம் இருந்தால் நகத்தின் (நகம் ஆரம்பிக்கும் விரல் பகுதியில், வளர்ந்த நகப் பக்கத்தின் அடிப்பகுதி அல்ல) அடிப்பகுதியில் இருக்கும் தோலையும் லேசாக முனைகளை கட் செய்துவிடலாம். இதனை பார்லரைவிட நாமே செய்து கொள்ளும்போது நமக்கு வலிக்காதவாறு செய்து கொள்ளலாம். க்யூட்டிக்கள் புஷ்ஷர் என்று மெனிக்யூர் கிட்டில் இருக்கும். அது இல்லாதவர்கள் ஸ்டெரிலைஸ் செய்த பிளக்கரின் பின்புறம் அல்லது ஸ்பூனை உபயோகித்து நகத்தில் அடிப்பகுதியில் உள்ள சதையை கீழ் நோக்கி தள்ளிவிடுங்கள். இப்படி செய்வதன் மூலம் அந்த இடங்களில் இருக்கும் அழுக்கும் நீங்கும். நகமும் நீண்டதாக தோற்றமளிக்கும். பிறகு கையில் லோஷனை தடவி நன்றாக விரல்களை அழுத்தி மசாஜ் செய்யுங்கள். பிறகு கையினை கழுவி துடையுங்கள்.
இப்போது நெயில் பாலீஷ் போடும் முறையினைப் பார்ப்போம். இதில் என்ன பெரிய விஷயம், நெயில் பாலீஷ் இரண்டு கோட்டிங் கொடுத்தால் விஷயம் முடிஞ்சது என்று சொல்லுபவர்கள் இந்த முறையில் ஒரு முறை பாலீஷ் போட்டால் நிச்சயம் வித்தியாசத்தை உணருவார்கள். நெய்ல் பாலீஷ் போடும் முன்பு முதலில் நகத்திற்கு (Base Coat) பேஸ் கோட் அப்ளை செய்ய வேண்டும். இது நெயில் பாலீஷ் போன்றே இருக்கும். ஆனால் நிறமற்றதாக இருக்கும். பேஸ் கோட்டிங் போடுவது, நெயில் பாலீஷ் நன்றாக நம் கையில் பிடித்துக் கொள்ளவும், நகத்திற்கு நிறமாற்றம் போன்ற எந்த விதமான கெடுதல்களும் வராமலும் தடுக்கும். பேஸ் கோட்டிங் உலர்ந்ததும் முதலில் ஒரு கோட்டிங் நெயில் பாலீஷ் கொடுத்து, 2 நிமிடம் கழித்து இரண்டாவது கோட்டிங் கொடுக்க வேண்டும். இது உலர ஒரு 2 நிமிடங்கள் கொடுங்கள். பிறகு Front Coating தர வேண்டும். இந்த Front Coating பாலீஷும் நிறமற்றதாக நெயில் பாலீஷ் போன்றே இருக்கும். எல்லா பிரபலமான பிராண்டுகளிலும் இவை அனைத்துமே கிடைக்கும். கடைகளில் கிடைக்காமல் போனாலும், சலோனில் நிச்சயம் கிடைக்கும்.
இப்படி அப்ளை செய்வதன் மூலம் நெயில் பாலீஷ் நீண்ட நாட்கள் இருப்பதோடு, அங்கங்கே உரிந்து போகாமல், பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கும். சாதாரண நெயில் பாலீஷ் நிறமும் இந்த முறையில் போடும்போது கைக்கு அழகை தரும். அது தவிர நாமே வீட்டிலேயே French manicure செட் போல செய்து கொள்ளலாம். இதற்கு, நிறமற்ற Base Coat ஒரு முறை அடித்து, பிறகு அதன் மேல் Front Coating அடித்து 2 நிமிடம் உலர விடுங்கள். இப்போது நகம் வளர்ந்திருக்கும் நுனிகளில் மட்டும் வெள்ளை நிறத்தை நக வளைவு மாறாமல் அப்ளை செய்யுங்கள். இது மிகவும் ஸ்டைலிஷான லுக் தரும். வெள்ளை நிறத்துக்கு பதிலாக சில்வர், கோல்ட் என்றும் உபயோகிக்கலாம். உங்கள் நகங்கள் இயற்கையாகவே பளபளப்பாக நகம் மட்டும் வெள்ளை வெளேரென்று இருப்பதுபோல் தெரியும். உடையின் நிறத்துக்கேற்றவாறு நகப்பாலீஷை மாற்ற முடியாதவர்கள், வெஸ்டர்ன் உடைகளை அடிக்கடி அணிபவர்களுக்கு, ஆபீஸ் செல்பவர்களுக்கு அனைவருக்குமே பொருத்தமாக இருக்கும். இது தவிர எப்போதும் சில்வர் கலர் பாலீஷ் கொஞ்சம் க்ளிட்டரியாக இருப்பதை வாங்கி வைத்துக் கொண்டால எப்போது நெயில் பாலீஷ் போட்டாலும், அதன் மேல் இரண்டாவது கோட்டிங்காக சில்வர் கலர் உபயோகித்தால் வித்தியாசமான பெப்பி லுக் கிடைக்கும். ஆனால் இதற்கு மிகவும் லைட்டான சில்வர் கலராக பார்த்து வாங்க வேண்டும். அதில் ஸ்டார் க்ளிட்டர், பெரிய க்ளிட்டர் என்று உள்ளதை வாங்கக்கூடாது.
அடுத்த வாரம் கால்களைப் பராமரிப்பது பற்றி பார்க்கலாம்.

கிட்ஸ் கிரீன்ரைஸ்

 தேவையானவை..
  • பாசுமதி அரிசி – 2 கப்
  • புதினா – ஒரு கட்டு
  • கொத்தமல்லி – ஒரு கட்டு
  • பச்சை மிளகாய்- 1
  • பூண்டு – ஒரு பல்
  • இஞ்சி –ஒரு சிறு துண்டு
  • பட்டை 1
  • கிராம்பு- 1
  • சோம்பு-1/4 டீஸ்பூன்
  • சின்ன வெங்காயம் -2
  • தேங்காய் -1டேபிள்ஸ்பூன்
  • கேரட் துருவல் – ¼ கப்
  • உருளைக்கிழங்கு- 1
  • பச்சை பட்டாணி-கால் கப்
  • உப்பு தேவைக்கு
 செய்முறை.
  • முதலில் பாசுமதி அரிசியை 4 கப் நீரில் ஊறவைக்கவும்
  • புதினா ,கொத்தமல்லியை கழுவி காம்பு நீக்கி அதனுடன் சோம்பு,பட்டை,கிராம்பு,வெங்காயம்,இஞ்சி,பூண்டு,தேங்காய் ,பச்சை மிளகாயும் சேர்த்து அரைக்கவும்.
  • பின் வாணலியில் நெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய உருளைகிழங்கை போட்டு வதக்கவும்.அதில் கேரட் துருவலையும் வதக்கி,பின் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.பச்சை பட்டாணி சேர்க்கவும்.பின் அரிசி ஊறிய நீரை சேர்த்து கொதிக்கவிடவும்.தேவையான உப்பு சேர்க்கவும்.
  • கொதித்ததும் அதில் ஊறிய அரிசியை போட்டு நன்றாக கலந்து மிதமான தீயில் வைத்து ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து அதே சூட்டில் 5 நிமிடம் வைத்து இறக்கவும்

Note:

காரம் குறைவாய்,காய்கள் சேர்த்து இருப்பதால் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு உகந்தது.

பருப்பில்லாத சாம்பார்


தேவையானவை.
  • வெங்காயம் -- 2
  • தக்காளி - 4
  • பச்சைமிளகாய் - 3
  • பூண்டு - 4பல்
  • கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
  • மஞ்சப்பொடி - அரைடீஸ்பூன்
  • கறி வேப்பிலை - ஒரு ஆர்க்
  • உப்பு - தேவையான அளவு
  • தாளிக்க
  • எண்ணை - 2ஸ்பூன்
  • கடுகு - 1ஸ்பூன்
  • பெருங்காயம் - சிறிதளவு
 செய்முறை.
  • வெங்காயம், தக்காளியை மெல்லிசாக நீளவாக்கில் கட்செய்யவும்.
  • பச்சைமிளகாய், பூண்டு நறுக்கவும்.
  • கடாயில் எண்ணை வைத்து கடுகு, பெருங்காயம் தாளித்து காய்கள்,பூண்டு மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • காய்கள் நன்கு வதங்கியதும்மஞ்சப்பொடிஉப்பு,ஒருகப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
  • நன்கு கொதித்து காய்கள்மிருதுவானதும்,கடலை மாவிலொருகப் தண்ணீரூற்றி கரைத்து அதில் விடவும்.
  • 5 நிமிடம் கொதித்ததும்கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

Note:

புளி,பருப்பு எதுவும் சேர்க்காத வித்யாசமான சாம்பார் இது.அனைவரும் விரும்புவார்கள்.

கால்களை பராமரிப்பது எப்படி?




கால்களை பராமரிப்பது எப்படி?
இப்போது கால்களுக்கான பாராமரிப்பையும், பெடிக்யூர் பற்றியும் பார்ப்போம். கால்களில் அனைவருக்கும் வரும் பெரிய தொல்லையே வெடிப்புகள்தான். பித்தவெடிப்புன்னு நாம சொன்னா வெளிநாட்டில் ஸ்கின் ட்ரையாகறதாலதான் வருதுன்னு சொல்றாங்க. எதுவாக இருந்தாலும் இது போக்க முடியாத விஷயமில்லை. வீட்டில் செருப்பு அணிய பிடிக்காதவர்கள், அதிக எடை உள்ளவர்கள், ட்ரை ஸ்கின் உள்ளவர்கள், அதிக அழுக்கான இடங்களில் நடப்பவர்கள், தோட்டவேலை செய்பவர்கள் என்று எல்லாருக்குமே இது பொது சொத்தாக இருக்கிறது.
pedicureமுதலில் இந்த வெடிப்புகளை எப்படி நீக்குவது என்பதை பார்க்கலாம். ரெகுலரான பெடிக்யூர் மிக அவசியம். பெடிக்யூர் ஆரம்பிக்கும் முன்பே எப்போதும் கால் நகங்களை ஷேப் செய்து விடுவது நல்லது. நம் ஊரில் பலரும் ஒட்ட வெட்டிவிடுவதுதான் வழி வழியாக செய்வது. ஆனால் காலில் நகங்கள் வளர்த்தால் அழகாக இருக்கும். காலில் நகங்கள் வளர்க்கும்போது எப்போதும் ஸ்கொயர் ஷேப்பையே கடைபிடித்தால் நன்றாக இருக்கும். என்னடா இது மெனிக்யூர், பெடிக்யூர்னு அலுத்துக்கிட்டால் இது அந்த காலத்திலிருந்து எல்லாரும் தினமுமே செஞ்சுட்டு இருந்த விஷயங்கள்னு சொன்னா ஆச்சரியமாதான் இருக்கும்.
பீர்க்கை நாறிலிருந்து, ப்யூமிஸ் ஸ்டோன் வரை பாட்டி காலங்களிலிருந்து ஸ்க்ரப் செய்யவென்றே உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், அந்த காலத்து பாத்ரூம்களில் கால்களை தேய்க்கவென்றே சின்னதாக சொர சொரப்பான கல் வைத்து கட்டியிருப்பார்கள். இந்த கல்லிற்கு பதிலாக நாம ஸ்க்ரப்பர் உபயோகிக்கிறோம். அவ்வளவே. கால்களுக்கு இப்படி ரெகுலரான ஸ்க்ரப்பிங், மாய்ச்சுரைசிங் (அந்த காலத்தில் தேங்காய் எண்ணெய்) செய்வதன் மூலம் பித்த வெடிப்புகளை நீக்கிவிடலாம்.
முதலில் நெயில் பாலீஷை ரிமூவ் செய்து, நகங்களை வெட்டி, பைல் செய்துக் கொள்ள வேண்டும். கால்கள் அதிக நேரம் தண்ணீரில் ஊறினால்தான் ஸ்க்ரப்பிங் செய்வது எளிது. கடினமான தோல்களை எளிதில் நீக்கலாம். அந்த காலம் போல இப்போது நம்மால அதிக நேரம் செலவழித்து, துணியெல்லாம் துவைத்துப் பிறகு குளிப்பதற்கு நேரம் இல்லை. அவசியமும் இல்லை. அதனால் கால்கள் நெடுநேரம் தண்ணீரில் ஊறுவதற்கு வாய்ப்பில்லை. இதற்கு மாற்றாகத்தான் பெடிக்யூர் என்ற பெயரில் கால்களை நெடுநேரம் சுடுதண்ணீரில் ஊறவைத்து பிறகு தேய்க்கிறார்கள். அதனால் வீட்டிலேயே பெடிக்யூர் செய்ய நினைப்பவர்கள், அதற்காக தலைகுளிக்கும் நாளை தேர்ந்தெடுத்தால் நல்லது. நாம் குளித்துமுடிக்கும்போது நமது கால்கள் தண்ணீரில் நன்றாக ஊறியிருக்கும். சளித் தொந்தரவு, சைனஸ் உள்ளவர்கள் ஒரு பக்கெட் சுடு தண்ணீரில் லிக்விட் சோப் ஊற்றி அதில் கால்களை ஊறவைக்கலாம்.
pedicureகால்களை தேய்க்கவென்றே கடைகளில் ஸ்டீலில் செய்த கைப்பிடி உள்ள Foot Scrubber விற்கிறார்கள். இதனைக் கொண்டு இறந்த செல்களையும், வெடிப்புகளையும் எளிதாக நீக்கலாம். எங்கெங்கு வெடிப்பு, அழுக்கு இருக்கிறதோ, அங்கேயெல்லாம் இந்த ஸ்க்ரப்பரால் நன்றாக ஸ்க்ரப் செய்யுங்கள். அதிக வெடிப்பு உள்ளவர்களுக்கு இதுவே சிறந்தது. மற்றவர்கள் Pumice Stone உபயோகிக்கலாம். Pedi Egg என்று உள்ளதையும் கூட ஸ்க்ரப் செய்ய உபயோகிக்கலாம். ஆனால் ஈரமான கால்களுக்கு சரிவராது.
மிகவும் கடினமாக அங்கங்கே முடிச்சு போல சிலருக்கு ஸ்கின் கடினத்தன்மையுடன் இருக்கும். இவர்கள் நான் மெனிக்யூரில் சொன்ன Corn Blade வாங்கி அதனைக் கொண்டு அந்த தோல்களை சீவிவிடலாம். பிறகு பெடிக்யூர் கிட் அல்லது நெயில் கட்டரிலேயே (கொக்கிபோன்று வளைந்திருக்கும், முனை கொஞ்சம் ஷார்ப்பாக இருக்கும்) உள்ள அட்டாச்மெண்ட் கொண்டு நக இடுக்குகளில் உள்ள அழுக்கினை நீக்க வேண்டும். பிறகு கால்களில் சோப் தேய்த்து, கால்தேய்க்க வென்றே பிரஷ்கள் கடைகளில் விற்கும் பிரஷினைக் கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும். இப்போது கால்களை நன்றாக துடைத்துவிட்டு, மாய்ச்சுரைசிங் க்ரீமை கால், விரல் இடுக்கு என்று எல்லா இடங்களிலும் மசாஜ் செய்வது போல் தடவுங்கள். பிறகு கால்கள் உலர்ந்ததும், கைகளுக்கு சொன்ன அதே முறையில் நெயில் பாலீஷ் போடுங்கள். அவ்வளவே பெடிக்யூர்.
pedicureகால்களில் அதிகமான வெடிப்பு உள்ளவர்கள் , வெடிப்பு நீக்க ஆயிண்மெண்ட் உபயோகிக்கும்போது, இரவு தூங்கும்போது நன்றாக கால் வெடிப்புகளில் அந்த மருந்துகளை தடவி, ஒரு சாக்ஸ் அணிந்துக் கொண்டு உறங்க சென்றால் சிறந்த பலன் கிடைக்கும். இல்லாவிட்டால் தேய்க்கும் அத்தனை மருந்தும் படுக்கையில் பட்டு பாழாவதோடு, கால்கள் சரியாகவும் நாளாகும். கை, கால்களின் பராமரிப்பினை மாதம் இரண்டு முறை செய்து கொண்டால் போதும். எப்போதும் அழகான தோற்றத்தில் இருக்க முகம் மட்டுமல்ல, கை கால்களும் நல்ல பராமரிப்பில் இருப்பது அவசியம்.
உடைகளும் கூட கை, கால்களின் ஷேப்பினை பொருத்துதான் தேர்ந்தெடுக்க வேண்டும். கை குண்டாக இருப்பவர்கள் ஸ்லீவ் லெஸ்ஸை தவிர்ப்பதும், கால் மிக குண்டாக அல்லது மிக ஒல்லியா இருப்பவர்கள் மினி ஸ்கர்ட்டை தவிர்ப்பதும் நல்லது. கால்களில் நிற வேறுபாடு அல்லது அதிகமான கரும்புள்ளி இருப்பவர்கள் ஸ்கர்ட் அணியும்போது ஸ்டாக்கிங் போட்டுக் கொண்டால் கால்களின் குறைபாடு தெரியாது. ஸ்டாக்கிங் பிடிக்காவிட்டால் ஸ்ப்ரே பவுண்டேஷனும் கூட உபயோகிக்கலாம். கைகளுக்கும் கூட நிற வேறுபாடு இருந்தால் ஸ்ப்ரே பவுண்டேஷன் அல்லது சாதாரண பவுண்டேஷன் உபயோகிக்கலாம். அதிக நேரம் தரையில் உட்கார நேர்ந்தால் கால் முட்டி தரையில் படாமல் துணியினை விரித்து அதில் உட்காரலாம். இதனால் நிறம் மாறாமல் இருக்கும். கைகளை மேஜையில் வைத்துக் கொண்டு நெடுநேரம் கம்ப்யூட்டர் முன்பு இருப்பது கூட கை முட்டியின் நிறத்தை பாதிக்கும். இதனைப் போக்க ஆலிவ் பட்டர் அல்லது கோக்கோ பட்டரை தினமும் தடவலாம். நல்ல பலன் இருக்கும்.
pedicureகால்கள் குட்டையாக இருப்பவர்கள் லாங்க் ஸ்கர்ட் போடலாம் அல்லது புடவை கட்டும்போது நல்ல இறக்கமாக கட்டலாம். இது கால்களின் உயரத்தை அதிகமாக்கி காட்டும். கால்களுக்கு செருப்பினை தேர்ந்தெடுக்கும்போதும் மிகுந்த கவனம் தேவை. அதிகமான உயரமுள்ள செருப்புகள் அணிய விருப்பமுள்ளவர்கள், அணியும் நேரத்தையாவது குறைந்த நேரமே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பென்சில் ஹீல்ஸ் உபயோகிக்கும் முன்பு நமது கால்கள் நம் எடையை நன்கு பாலன்ஸ் செய்கிறதா என்று பார்த்துவிட்டு வாங்குங்கள். ஜாகிங், வாக்கிங் செய்ய நல்ல தரமான ஷூக்களையே வாங்குங்கள். செருப்புகள் அணிந்து வாக்கிங் போவதைக் காட்டிலும், ஷூ அணிவதால் பாடி பாலன்ஸ் நன்கு இருக்கும். காற்றோட்டமுள்ள ஷூக்கள் அணிவது கால் தொற்றுநோய்களைத் தடுக்கும். ஜிம்முக்கு செல்லும் பழக்கமுள்ளவர்கள் எக்காரணம் கொண்டும் அங்கே குளிக்கும்போது பாத்ரூம் ஸ்லிப்பர் இல்லாமல் குளிக்காதீர்கள். அதிகமாக தொற்று நோய் பரவும் இடங்கள் இவை. இப்படி கை,கால்களை கவனித்துக் கொண்டால் அழகாக மட்டுமல்ல, ஆரோக்கியமாகவும் இருக்கலாம். அடுத்த உறுப்பினைப் பற்றி வரும் பதிவில் பார்க்கலாம்